குஜராத் கலவர வழக்கை விசாரித்த ஒய்.சி. மோடி சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமனம்
டெல்லி: குஜராத் கலவர வழக்குகளை விசாரித்த ஒய்.சி. மோடி மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ-யின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.பி.ஐ.யில் கூடுதல் இயக்குநராக இருந்த தமிழகப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் அண்மையில் தேசியக் குற்ற ஆவணங்கள் பதிவுத் துறையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து காலியான சிபிஐ கூடுதல் இயக்குநர் பதவிக்கு ஒய்.சி. மோடியை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
யார் இந்த ஒய்.சி. மோடி?
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த போது 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை முடிவில் நரேந்திர மோடிக்கு தொடர்பு இல்லை எனக் கூறப்பட்டது. இதனால் நரேந்திர மோடி, குஜராத் கலவர வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவில் 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2012 ஆம் ஆண்டு ஜூலை வரை பணியாற்றியவர் ஒய்.சி. மோடி. சி.பி.ஐ. அமைப்பில் இதற்கு முன்பு டி.ஐ.ஜி. அந்தஸ்தில் அவர் பணியாற்றியுள்ளார்.
மேலும் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா 2003-ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொல்லப்பட்ட போது அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. அதன் மேற்பார்வை அதிகாரியாக ஒய்.சி. மோடி இருந்தார். இந்த வழக்கில் 12 பேர் கைதான போதும் அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை நிரூபிக்கத் தவறியதால் அனைவரையும் குஜராத் உயர் நீதிமன்றம் 2011-ஆம் ஆண்டு விடுதலை செய்தது.
தற்போது மேகாலயா காவல் துறையில் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார் ஒய்.சி. மோடி. அவரை சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
மேலும் சிபிஐயில் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வந்த ஆர்.கே. தத்தாவை அதே துறையில் சிறப்பு இயக்குநராக நியமிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
1981-ஆம் ஆண்டு கர்நாடக மாநில பிரிவைச் சேர்ந்த தத்தா. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்குகளை கையாண்டு வரும் மூத்த அதிகாரிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.