"சீச்சீ... எனக்கு இந்த பழம் (அமைச்சர் பதவி) வேண்டாம்" என்கிறார் எடியூரப்பா
டெல்லி: கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்று மோடியிடம் எடியூரப்பா கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக வெளிவராமல் எடியூரப்பாவுக்கு அமைச்சர் பதவி அளிக்க கூடாது என்று கட்சிக்குள் எதிர்ப்பு வலுப்பதால் அவர் தானாக முன்வந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஷிமோகா தொகுதியில் போட்டியிட்டு மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அனுவபம், மக்கள் ஆதரவு உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து எடியூரப்பாவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் வெளியானது. அதற்கு முத்தாய்ப்பாய், டெல்லியில் மோடியை சந்தித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில் எடியூரப்பா தானாக முன்வந்து அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடி தனது பிரச்சாரத்தின்போது ஊழருக்கு எதிராக முழு வீச்சில் பேசினார். இந்நிலையில் எடியூரப்பாவை அமைச்சரவையில் சேர்த்தால் அது எதிர்க்கட்சிகளால் மட்டுமின்றி, பாஜக தரப்பிலுமே விமர்சனங்களை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சிறிய அளவிலான அமைச்சரவையை உருவாக்க மோடி திட்டமிட்டுள்ளார். ஆனால் கர்நாடகாவில் இருந்து அனந்தகுமார், முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா ஆகியோரும் அமைச்சர் பதவிக்கான போட்டியிலுள்ளதால் யாருக்கு அமைச்சர் பதவியை அளிப்பது என்ற குழப்பம் மோடிக்கு.
இதனால் முதல்கட்ட அமைச்சரவை உருவாக்கத்தில் இருந்து விலகி இருந்துவிட்டு இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் அமைச்சரவையில் இணைய எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். அதற்குள் சில வழக்குகளில் இருந்து வெளியே வந்துவிடலாம் என்றும் அவர் கருதுகிறார். இதனால் அமைச்சர் பதவி வேண்டாம், உள்கட்சி பூசலால் உடைபட்டுப்போன கர்நாடக பாஜகவுக்கு புத்துயிர் கொடுக்கும் பணியை மேற்கொள்ள உள்ளேன் என்று மோடியிடம் எடியூரப்பா கூறிவிட்டார்.