ஜெயலலிதா சிறையில் இருப்பதை இரு மாநில பிரச்சினையாக்காதீர்கள்: எடியூரப்பா வேண்டுகோள்
பெங்களூர்: ஜெயலலிதா வழக்கை தொடர்ந்து, தமிழர், கன்னடர் உறவில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்று முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கேட்டுக்கொண்டார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக தேசிய துணைத் தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பா பெங்களூரில் இதுகுறித்து கூறியதாவது: ஜெயலலிதா வழக்கு, ஜாமீன் மறுப்பு போன்றவை எல்லாம் சட்ட நடவடிக்கைகள். எனவே எக்காரணத்தைக் கொண்டும், சென்னையிலுள்ள தமிழர்கள், அங்கு வசிக்கும் கன்னடர்களுக்கு எதிராக கோபப்பட வேண்டாம்.
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக கூறிக்கொண்டு வன்முறையை பிரயோகிப்பது என்பது, அவருக்கு எதிராகவே போய் முடியும் வாய்ப்பைத்தான் தரும். எனவே கோர்ட் வழக்கு தொடர்பாக கன்னடர், தமிழர் மத்தியில் பிரிவினை வேண்டாம். விரல் எண்ணிக்கையிலுள்ள தமிழர்கள்தான் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுகிறார்களே தவிர, பெரும்பான்மை தமிழர்கள் அமைதியாக, சட்டம் குறித்த தெளிவு கொண்டவர்களாகவே உள்ளனர்.
இருப்பினும் ஒரு சிலர் செய்யும் அந்த வன்முறைகளும் நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று எடியூரப்பா தெரிவித்தார்.
எடியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்தபோது, தமிழர், கன்னடர் உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர் என்பதும், 18 ஆண்டுகளாக பெங்களூரில் திறக்கவிடாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை எடியூரப்பாவின் உத்தரவு திறக்க வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.