லோக்சபா தேர்தல்: ஷிமோகா தொகுதியில் போட்டியிட விரும்பும் எதியூரப்பா!
ஷிமோகா: பா.ஜ.க. சார்பில் ஷிமோகா தொகுதியில் போட்டியிட தயார் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கூட்டம் ஷிமோகா மாவட்டம் சிகாரிபுராவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் துணை முதல்வர் ஈசுவரப்பா, ராகவேந்திரா எம்.பி., ஆயனூர் மஞ்சுநாத் எம்.பி., மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் பேசிய எடியூரப்பா, கூறியதாவது: ''நாடாளுமன்ற தேர்தலில் நான் சிமோகா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க. மத்திய, மாநில தலைவர்கள் விரும்பினார்கள். மேலும், எனது வீட்டிற்கு வந்து மாநில தலைவர்கள் போட்டியிட வேண்டும் வேண்டுகோள் விடுத்தனர். அதனால், அவர்களின் விருப்பத்தையும், வேண்டுகோளையும் ஏற்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன்.
பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் அலை கர்நாடகத்தில் வீச தொடங்கி உள்ளது. பத்திரிக்கை, டிவி, பொதுமக்கள் நடத்திய கருத்து கணிப்பில் நரேந்திர மோடி தான் அடுத்து பிரதமர் என்று கூறும் நிலையில் உள்ளது. இதனால், நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் கூடுதல் தொகுதியில் வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
நான் டெல்லி சென்றாலும், எனது முழு கவனமும் மாநில வளர்ச்சியில் தான் இருக்கும். ஷிமோகா தொகுதியில் வளர்ச்சியை எனது மகன் ராகவேந்திரா பார்த்து கொள்வார்" என்று கூறியுள்ளார் எடியூரப்பா.