சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதனை நாயகனான எடியூரப்பா! மீண்டும் அற்ப ஆயுளில் முடிந்த முதல்வர் பதவி!
தென்னிந்தியாவில் பாஜகவின் முதல் முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எடியூரப்பா மூன்றாவது முறையாக மீண்டும் தனது பதவியை இழந்துள்ளார்.
Recommended Video
பெங்களூரு: தென்னிந்தியாவில் பாஜகவின் முதல் முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எடியூரப்பா மூன்றாவது முறையாக மீண்டும் தனது பதவியை இழந்துள்ளார்.
பூகனகெரே சித்தலிங்கப்பா எடியூரப்பா 1943ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பிறந்தார். பாஜகவில் அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த இவர், பல சிக்கல்கள் இழுபறிகளுக்கு நடுவே இன்று கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவியேற்றார்.
மாண்டியா மாவட்டம் கேஆர் தாலுக்கா, பூகனகெரேவில் 1943ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பிறந்தார்.எடியூரப்பாவின் பெற்றோர் சித்தலிங்கப்பா- பட்டதாயம்மா ஆவர். தும்கூர் மாவட்டம் எடியூரில் உள்ள கோவிலில் உள்ள கடவுளின் பெயராக அவருக்கு எடியூரப்பா என பெயர் சூட்டப்பட்டது.
4 வயதில் தாயை இழந்தார்
நான்கு வயதாக இருக்கும்போதே தாயை இழந்தார் எடியூரப்பா. மாண்டியாவில் கல்லூரி படிப்பை முடித்தார். 1965 ஆம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்த அவர் பின்னர் அந்த பணியை உதறிவிட்டு ஷிகாரிபுரா தொகுதியில் உள்ள வீரபத்ரா சாஸ்திரி சங்கர் ரைஸ் மில்லில் கிளர்க்காக பணியை தொடங்கினார்.
ஓனர் மகளை மணந்தார்
1967ஆம் ஆண்டு ரைஸ் மில் உரிமையாளரின் மகள் மைத்திரி தேவியை மணந்தார் எடியூரப்பா. பின்னர் ஷிவமோகாவில் ஹார்டுவேர் கடையை திறந்தார். எடியூரப்பாவுக்கு ராகவேந்திரா, விஜயேந்திரா என்ற இரண்டு மகன்கள் அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.
2004ல் மனைவியை இழந்தார்
எடியூரப்பாவின் மனைவி மைத்திரி தேவி 2004ஆம் ஆண்டு சம்பில் நீர் எடுத்தபோது தவறி விழுந்து உயிரிழந்தார். எடியூரப்பா கல்லூரி நாட்களிலேயே ஆர்எஸ்எஸில் அதிக ஆர்வத்துடன் இருந்தார். 1972-ம் ஆண்டு தாலுகா அளவிலான தலைவராக எடியூரப்பா உயர்ந்தார்.
பாஜக மாநில தலைவரானார்
அதன்பின் 1983-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா அதில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் இதுவரை 6 முறை போட்டியிட்ட எடியூரப்பா அனைத்து முறைகளிலும் வெற்றி பெற்றுள்ளார். 1988-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவராக எடியூரப்பா நியமிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சி தலைவரானார்
1994-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார். கடந்த 1999-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பா தோல்வியைச் சந்தித்த போதிலும், அங்குள்ள மேலவை உறுப்பினராகப் பொறுப்பேற்றார். 2004-ம் ஆண்டு மீண்டும் மேலவை உறுப்பினராகத் தேர்வாகி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார் எடியூரப்பா.
விட்டுத்தர மறுத்த குமாரசாமி
கடந்த1999-ம் ஆண்டு காங்கிரஸின் தரம்சிங் ஆட்சியை மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமியுடன் இணைந்து கவிழ்த்த எடியூரப்பா, கூட்டணி ஆட்சி அமைத்தார். 20 மாதங்கள் குமாரசாமி ஆட்சியும், அடுத்த 20 மாதங்கள் எடியூரப்பா ஆட்சி செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2006 பிப்ரவரி 3 முதல் 2007 அக்டோபர் 8-ம் தேதி வரை முதல்வராக இருந்த குமாரசாமி 20 மாதங்கள் முடிந்தவுடன் முதல்வர் பதவியை விட்டுத்தர மறுத்ததால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
7 நாட்கள் முதல்வராக
இதனால், பாஜக ஆதரவை விலக்கிக்கொண்டது. அதன்பின் இரு கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து மீண்டும் ஆட்சி அமைத்தது. 2007 நவம்பர் 12ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 7 நாட்கள் மட்டும் முதல்வராக இருந்த எடியூரப்பா ஆட்சி குமராசாமியால் கவிழ்க்கப்பட்டது.
முதல் பாஜக முதல்வர்
பின்னர் 2008 மே 30 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பாஜக சார்பில் முதல்வராக பதவியேற்றார். இவரே தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதல்வர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.3ஆண்டுகள் 62 நாட்கள் இவர் முதல்வர் பதவியில் இருந்தார்.இரு நில ஊழல் வழக்குகளை லோக் ஆயுக்தா பதிவு செய்தநிலையில் 2011 ஜூலை 31 ஆம் தேதி தமது முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
மீண்டும் ஆட்சிக்கட்டிலில்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 104 இடங்களை கைப்பற்றிய பாஜக தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் கடந்த 17 ஆம் தேதி ஆட்சியமைத்தது. எடியூரப்பா மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் எடியூரப்பா. இதன்மூலம் கர்நாடகாவின் 23வது முதல்வர் என்ற பெருமையை பெற்றார் எடியூரப்பா.
எடியூரப்பா ராஜினாமா
ஆனால் இம்முறையும் அற்ப ஆயுளில் முடிந்தது அவரது முதல்வர் பதவி. மூன்று நாட்களே முதல்வர் பதவியில் நீடித்த எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே போதிய பெரும்பான்மை இல்லை என கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.