காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவிக்கு போன் செய்து ரூ. 15 கோடிக்கு பேரம் பேசிய எடியூரப்பா மகன்
Recommended Video
பெங்களூர்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. அரபைல் ஹெப்பார் சிவராமின் மனைவிக்கு எடியூரப்பாவின் மகன் போன் செய்து பேரம் பேசியுள்ளார்.
பாஜகவின் எடியூரப்பா அரசு தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியதாக இருந்தது. கர்நாடக சட்டசபையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு பாஜகவுக்கு பலம் இல்லை. இதனால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்களின் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது.
இந்நிலையில் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள எல்லாபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அரபைல் ஹெப்பார் சிவராமின் மனைவிக்கு எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போன் செய்து பேரம் பேசியதாக கன்னட டிவி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உங்கள் கணவரை எங்களுக்கு ஆதரவு அளிக்கச் செய்தால் ரூ. 15 கோடி தருகிறோம் என்று விஜயேந்திரா பேரம் பேசியுள்ளாராம். இது குறித்த ஆடியோவை அந்த கன்னட டிவி சேனல் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.