உச்ச நீதிமன்றம் உத்தரவு... எடியூரப்பா இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பாரா?
எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கில் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க வேண்டும்.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு நொடியும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. 104 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எடியூரப்பாவும், காங்கிரஸ் உள்ளிட்ட 117 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக குமாரசாமியும் ஆட்சியமைக்க வஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியிருந்தனர்.
ஆனால் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார். அதனை எதிர்த்து இரவோடு இரவாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக வழக்கு தொடர்ந்தது.
விடிய விடிய விசாரணை
அந்த வழக்கை இரவிலேயே விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை இரவே விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தார். நள்ளிரவு 1.45 மணிக்கு ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண், எஸ்.ஏ.பாப்டே ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் காங்கிரஸ் மனுவின் விசாரணை தொடங்கியது.
வாதாடிய வக்கில்கள்
உச்சநீதிமன்ற அறை எண் 6-ல் விசாரணை நடைபெற்றது. ஆளுநர் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாஜக தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆகியோர் வாதாடினர். காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடினார்.
முடிக்க சொன்ன நீதிபதி
காங்கிரஸ் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாதிட்ட சிங்வியின் வாதத்தை முடித்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் தனது வாதத்தை முடித்துக்கொண்டார். அதன்பின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மற்றும் பா.ஜ.க. வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
தடை விதிக்க மறுப்பு
இதையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பதற்கு தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பினருக்கும் நோட்டிஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தலையிட முடியாது
மேலும் ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கே.கே.வேணுகோபால் மற்றும் முகுல் ரோஹத்கி வாதாடிய நிலையில், ஆளுநரின் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் ஆய்வின் கீழ்தான் வரும் என நீதிபதி பாப்டே கூறினார்.
விளக்கம் கேட்க முடியாது
சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.கே.சிக்ரி தீர்ப்பை வாசித்தார். ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ முடியாது.
கடிதங்களின் நகல்
எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்தகட்ட விசாரணை வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
காரசார விவாதம்
மேலும் இதுதொடர்பாக ஆளுநர் மற்றும் எடியூரப்பா பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி வெள்ளிக்கிழமையான இன்று காலை உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. அப்போது காங்கிரஸ், மஜத, பாஜக வக்கீல்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். காங். சார்பில் கபில் சிபல் வாதிட்டு வருகிறார். பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தது சட்டவிரோதம் என காங்கிரஸ் சார்பில் வாதிடப்பட்டது.
சட்டவிரோதமாக சிறை
காங்., ஜேடிஎஸ் பொருந்தா கூட்டணி என பாஜக வக்கீல் முகுல் ரோத்தகி வாதிட்டார். எம்.எல்.ஏக்கள் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டிருப்பதாக பாஜக வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்தார்.மேலும் முகுல் ரோத்தகி பாஜக சார்பில் இரண்டு கடிதங்களையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஜேடிஎஸ்-காங்கிரஸ் கட்சிக்கு பல எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் தரவில்லை என்றும் முகுல் ரோத்தகி தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாமா
இதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம் ஆட்சி அமைப்பது எண்ணிக்கை விளையாட்டு அல்ல என்றும் பெரும்பான்மை இருந்தால்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும் கூறியது. மேலும் திபதி சிக்ரி முன்னிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாமா? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
முதலில் எங்களுக்கே வாய்ப்பு
நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார் என்ற காங்கிரஸ், மஜத கூட்டணி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எங்களுக்கு தான் முதலில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றனர். மேலும் எம்எல்ஏக்கள் அச்சமின்றி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். காலதாமின்றி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மஜத காங்கிரஸ் கட்சிகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அவகாசம் கேட்ட பாஜக
இதனை கேட்ட நீதிபதி சிக்ரி, இந்த வழக்கில் ஆளுநர் முடிவை ஆய்வு செய்வது அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதுதான் சரியானதாக இருக்கும் என்றார். அதிலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதுதான் சிறந்த வழி என்றும் நீதிபதி தெரிவித்தார். ஆனால் இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கால அவகாசம் வேண்டும் என்றும் குமாரசாமி கையெழுத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இன்று வாக்கெடுப்பு
ஆனால் பாஜக தரப்பு கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு தர கர்நாடக டிஜிபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இன்று காலை பதவியேற்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் ஒருநாள் மட்டுமே அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.