இது மோசடித் தேர்தல்... தேர்தல் ஆணையத்துக்கு எடியூரப்பா திடீர் கடிதம்
Recommended Video
பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தவறு நடந்திருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்துக்கு ஆட்சி, அதிகாரத்தைப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியைத் தழுவி பதவி விலகிய எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத்-த்துக்கு எடியூரப்பா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், விஜயபுரா மாவட்டத்தில் ஏராளமான விவிபேட் இயந்திரங்கள் அனாதரவாக விடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது தேர்தல் ஆணையம் கூறியபடி, கர்நாடக சட்டசபைத் தேர்தல் நேர்மையான முறையில், நியாயமான வழியில் நடந்திருக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் கூறிய கூற்றுக்களில் உண்மை இல்லை என்பதையும் உணர முடிகிறது என்று கூறியுள்ளார் எடியூரப்பா.
ஆனால் இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் கூறுகையில், விஜயபுரா மாவட்டத்தில் எட்டு விவிபேட் இயந்திரங்களை வைக்கும் பெட்டிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் இருந்த விவிபேட் இயந்திரங்கள் உண்மையானவை அல்ல. அந்த இயந்திரங்களை செயல்படுத்துவதற்கு தனியாக 6 இலக்க கோட் வார்த்தை உண்டு. ஆனால் இந்த இயந்திரங்களில் அவை இல்லை.
இவை அனைத்தும் போலியான இயந்திரங்கள் ஆகும். குஜராத்தைச் சேர்ந்த ஜோதி பிளாஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போலி இயந்திரங்கள். ஒரிஜினல் தரத்துடன் கூடியதாக தயாரிக்கப்பட்ட போலி இயந்திரங்கள் ஆகும். இதற்கும், தேர்தல் நடந்த முறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக தெரிகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக கர்நாடக சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பாஜக கடுமையாக முயற்சித்தது. அதற்கு வசதியாக கர்நாடக ஆளுநரும் அவகாசம் எல்லாம் கொடுத்துப் பார்த்தார். ஆனாலும் குதிரை பேரத்திற்கு ஜேடிஎஸ் - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விலை போக மறுத்து விட்டனர். இதனால் பாஜகவின் கனவு தகர்ந்தது. 2 நாட்களிலேயே முதல்வர் பதவியை இழந்தார் எடியூரப்பா என்பது நினைவிருக்கலாம்.