மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்.1 முதல் கட்டாய யோகா பயிற்சி வகுப்புகள்!
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டாய யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பேசும் போது, சர்வதேச யோகா நாளை அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று ஐக்கிய நாடுகள் சபையும் ஜூன் 21-ந் தேதியன்று சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு பணியாளர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டாய யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறாது.
நாடு முழுவதும் உள்ள 31 லட்சம் மத்திய அரசு பணியாளர்களுக்கும் இந்த யோகா பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கின்றன.