யோகா குரு பாபா ராம்தேவின் நிறுவனத்துக்கு 24 மணி நேரமும் துணை ராணுவ பாதுகாப்பு
ஹரித்வார்: ஹரித்வாரில் உள்ள யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி உணவு மற்றும் மூலிகை பூங்கா நிறுவனத்திற்கு மத்திய துணை ராணுவம் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ளது யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி புட் மற்றும் ஹெர்பல் பார்க் நிறுவனம். இந்த நிறுவனத்தில் பாதுகாவலர்களுக்கும், ஹரித்வார் டிரக் யூனியன் ஆட்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார், 4 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து பாபா ராம்தேவின் நிறுவனத்துக்கு உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை இயக்குனர் சுரிந்தர் சிங் கூறுகையில், "பதஞ்சலி உணவு மற்றும் மூலிகை பூங்கா நிறுவனத்திற்கு 35 படை வீரர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் பாதுகாக்க அளிக்க உள்ளது.
இதற்கான அனைத்து செலவுகளையும் பதஞ்சலி நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். மேலும் இதற்காக ஆண்டுக்கு ரூ. 40 லட்சத்தை கட்டணமாக பதஞ்சலி நிறுவனம் செலுத்தும்." என்று தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களுக்கு மத்திய பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு வழங்குவது இது முதல் முறை அல்ல. தற்போது இந்தியாவில் இன்போசிஸ் உட்பட 8 தனியார் நிறுவனங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளன. பாபா ராம்தேவ் தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு வளையத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.