யோகா செய்வது நல்லது ஆனால் பூஜை செய்யாதீர்கள்… இஸ்லாமியர்களுக்கு அறிவுரை வழங்கிய தலைவர்!
லக்னோ: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலாக, இந்து மதம் சார்ந்த வழிபாடுகள் மட்டுமின்றி, நம்பிக்கை, யோகா பயிற்சி போன்றவற்றையும் மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில்,இஸ்லாமிய மக்கள் பின்பற்றிவரும் 'முத்தலாக்' முறையை ரத்து செய்யவும் மத்திய பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது பெரும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், பாஜக உலகம் முழுவதும் பரப்பி வரும் யோகா பயிற்சி முறைக்கு ஆதரவாக, இஸ்லாமியர்களின் தலைவர் ஒருவர் குரல் கொடுத்துள்ளது, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியத்தின் உறுப்பினராக உள்ள மவுலானா காலித் ரஷித் ஃபராங்கி மஹாலி யோகாவை ஆதரித்து கருத்துக் கூறியுள்ளார். இவர், சன்னி பிரிவு மக்களின் மதத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி ஒன்றில் மவுலானா காலித் பேசும்போது, இவ்வாறு பேசியுள்ளார். யோகா பயிற்சி செய்வது, முஸ்லீம் மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் உடல்நலம் அளிக்கும் என்று கூறிய அவர், முஸ்லீம் மக்கள் பூஜை செய்வதுதான் தவறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் வரும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, 55,000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட யோகா பயிற்சி நிகழ்வு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த நிகழ்வில், முஸ்லீம்கள் 300 பேரும் பங்கேற்பார்கள் என்றும், இதற்கான பயிற்சி வழங்கும் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் மவுலானா காலித் தெரிவித்துள்ளார்.