யோகா இந்து கலாச்சாரத்துடன் தொடர்புடைய உடற்பயிற்சி
லக்னோ: அனைத்து அரசு பள்ளிகளில் யோகாவை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
பள்ளிகளில் பகவத் கீதையை பாடமாக்குவதுடன், சரவஸ்வதி பஜனை பாடல்களை பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்று உத்தர பிரதேசத்தில் நடந்த அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாரியத்தின் மூத்த உறுப்பினர் எஸ்.க்யூ.ஆர். இல்யாஸ் யோகா பற்றி ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
யோகா தினம்
யோகா தினத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. மாறாக அரசு பள்ளிகளில் இந்து மத பழக்க வழக்கங்களை அறிமுகப்படுத்துவதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
சூரிய நமஸ்காரம்
அரசு பள்ளிகளில் யோகா மற்றும் சூரிய நமஸ்காரத்தை அறிமுகப்படுத்துவதை தான் எதிர்த்து வழக்கு தொடர வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் இந்து கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. இதை தான் நாங்கள் எதிர்க்க விரும்புகிறோம்.
யோகா
யோகா தினத்தால் எங்களுக்கு பிரச்சனை இல்லை. அரசு பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட மத போதனைகளை அறிமுகப்படுத்தக் கூடாது. யோகா என்பது உடற்பயிற்சி தான். ஆனால் அது வெறும் உடற்பயிற்சி கிடையாது. அதில் இந்து தர்மத்தின் போதனைகளும் உள்ளது. அதனால் யோகாவில் உள்ள இந்துத்துவ போதனை மற்றும் கலாச்சாரத்தை தான் நாங்கள் எதிர்க்கிறோம். யோகாவை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அரசு பள்ளிகளில் யோகாவை அறிமுகப்படுத்துவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒரு கூட்டான முடிவாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் வாரியம் உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளது.
மத்திய அரசு
யோகா கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது எங்களுக்கும் தெரியும். ஆனால் ராஜஸ்தான் அரசோ யோகாவை கட்டாயமாக்கி உள்ளது. யோகா செய்ய சில மாணவர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பு தெரிவித்தவர்களை குறி வைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பள்ளிகள்
அரசு பள்ளிகளில் மதம் நுழையக் கூடாது. தனியார் பள்ளிகள் பற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது. தனியார் பள்ளிகள் அதன் முடிவை அதுவே எடுக்கும். ஆனால் அரசு பள்ளிகளில் அரசு சொல்வதை தான் செய்ய வேண்டும்.
அயோத்தி
அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2010ம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பே இப்போது தான் உச்ச நீதிமன்றத்தை அடைந்துள்ளது. சில ஆவணங்களை மொழிபெயர்த்து கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க சிறிது காலம் ஆகும் என்றார் இல்யாஸ்.