ஆம் ஆத்மியிலிருந்து யோகேந்திர யாதவ், பிரஷாந்த் பூஷன் நீக்கம்.. நள்ளிரவில் டிஸ்மிஸ்!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து யோகேந்திர யாதவும், பிரஷாந்த் பூஷனும் இரவோடு இரவாக நீக்கப்பட்டுள்ளனர். ஒழுங்கீனம் மற்றும் கட்சி விரோத நடவடிக்கை காரணமாக இருவரும் நீக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இவர்களுடன் அனந்த்குமார், அஜீத் ஜா ஆகியோரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கட்சித் தலைமைக்கும், இந்தத் தலைவர்களுக்கும் இடையே கட்சி அளவிலும், பொது வெளியிலும் நடந்து வந்த காரசாரமான குற்றச்சாட்டுப் படலம், விமர்சனம், மோதல் ஆகியவை முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்த சில நாட்களிலேயே யாதவ், பூஷன் மற்றும் கெஜ்ரிவால் இடையே கடும் மோதல் வெடித்து விட்டது. கெஜ்ரிவால் சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்படுவதாக யாதவும், பூஷனும் குற்றம் சாட்டினர். அதேசமயம், இருவரும் சேர்ந்து கெஜ்ரிவாலை கட்சியை விட்டு நீக்க முயற்சிப்பதாக கெஜ்ரிவால் தரப்பு குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் இருவரும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டனர். தற்போது கட்சியை விட்டே நீக்கப்பட்டு விட்டனர். நேற்று நள்ளிரவுவாக்கில் இவர்கள் நீக்கம் தொடர்பான கடிதத்தை வெளியிட்டது கட்சி. கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூடி 6 மணி நேரம் விவாதித்தது. அதன் இறுதியில், நால்வரையும் நீக்கும் ஒரு மனதான முடிவு எடுக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.