ராமர் கோவில் கட்ட ரூ.300 கோடி தாங்க.. கார்ப்பரேட்டுகளிடம் கை ஏந்தும் யோகி ஆதித்யநாத்!
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ரூபாய் 300 கோடி உதவி கேட்டு இருக்கிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
Recommended Video
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ரூபாய் 300 கோடி உதவி கேட்டு இருக்கிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் பதவி ஏற்றவுடன் உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்று உறுதியளித்தார். இதற்கு 300 கோடி செலவாகும் என்று கூறினார்.
இதற்கான போதிய நிதி அரசிடம் இல்லை என்று கூறப்படுகிறது. இன்னும் சில புதிய திட்டங்களுக்கும் உதவி கேட்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தனியார் மற்றும் பொதுத்துறை
இதற்காக தற்போது தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் அம்மாநில அரசு உதவி கேட்டு இருக்கிறது. மொத்தமாக 300 கோடி ரூபாய் பணமும் கேட்டு உள்ளது. இதற்காக வரி வசூலிக்கப்படாது என்று அரசு கூறியுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் இதில் முதலீடு செய்தால், கோவிலில், அந்நிறுவனம் சார்ந்த விளம்பரங்கள் இடம்பெறும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
நிறைய திட்டம்
அங்கு ராமர் சிலையும் கட்டப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் ராமாயண கேலரி, ராம் லீலா மறுமலர்ச்சி திட்டம், ராம் முக சிலை, ராம் - சீதா கல்யாண அரங்கம், ராமாயணத்தில் வரும் பெரிய நபர்களுக்கு சிலை, அயோத்தி புதிய நிர்மாணம், கோவில்களுக்கு சாலைகள், கோவில்களுக்கு மின்வசதிகள் என நிறைய திட்டம் அறிவிக்கப்பட இருக்கின்றது. இதற்காக மட்டும் பட்ஜெட்டில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஒதுக்கப்பட இருக்கின்றது.
குஜராத்தில் இதே போல்
இதே போல் குஜராத்திலும் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு கட்டப்பட இருக்கும் ''ஒற்றுமைக்கான சிலை'' என்ற பெயர் பெற்றுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கும் ரூ.121 கோடி ரூபாய் நிதி வாங்கப்பட்டுள்ளது. இந்த நிதி, இந்தியாவின் முன்னணி பொது எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் சிலைக்கு தனியாக பணம் அளிக்கப்பட்டுள்ளது.
மிகவும் மோசம்
இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே மோசமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து இப்படி சிலை கட்டுவதற்காக பணம் வாங்குவது பெரிய தவறு என்று கூறியுள்ளனர். அந்த பொதுத்துறை நிறுவனங்கள் அவர்களின் துறை சார்ந்த வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் இதை பயன்படுத்தலாம் என்று காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.