சிஎம் சார்.. மெதுவா கூட்டுங்க, தரைக்கு வலிக்க போகுது!
ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்கியது உ.பி. அரசு. இந்த நடவடிக்கை உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் சென்றுள்ளார். அரை மணி நேரம்தான் தாஜ்மகாலில் இருக்கப்போவதாக முன்கூட்டியே அறிவித்திருந்தார் அவர்.
இன்று காலையில் தாஜ்மஹாலுக்கு சென்ற யோகி ஆதித்யாநாத் தாஜ்மஹால் பகுதியை சுற்றிப்பார்த்துள்ளார். மேலும் அங்கு அவர் சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு நீண்ட துடைப்பத்தை வைத்து தரையை கூட்டியிருக்கிறார். இத்தனை விஷயங்களை அவர் எப்படி அரை மணி நேரத்தில் செய்தார் என்று நிறைய பேர் அவரை கலாய்த்து வருகின்றனர்.
பட்டியலில் இருந்து நீக்கம்
உ.பி.யில் புதிதாக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அரசு சில வாரங்களுக்கு முன் தாஜ்மாஹாலை அவர்களது சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கியது. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்தும் தாஜ்மஹால் நீக்கப்பட்டது. தாஜ்மஹால் முகாலய அரசால் கட்டப்பட்டது அது இந்தியக் கட்டிடக் கலை இல்லை என்பதால் , தாஜ் மஹால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தாஜ்மஹாலில் பார்க்கிங் நீக்கம்
இந்த நிலையில் தாஜ்மஹாலுக்கு சில நாட்களுக்கு முன் யாரோ குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தனர். இதன் காரணமாக அங்கு ஒருநாள் முழுக்க சோதனை நடத்தப்பட்டது. அதற்கு மறுநாளே உத்தரபிரதேச அரசு தாஜ்மஹாலுக்கு வெளியே இருந்த பார்க்கிங்கை நீக்க கூறி உத்தரவு பிறப்பித்தது. பாஜக தலைவர்களில் சிலர் அது ஒரு இந்து கோவில் சிவனுக்காக கட்டப்பட்டது என்றும் கருத்து தெரிவித்தனர்.
இந்த தொடர் அறிவிப்புகள் காரணமாக தாஜ்மஹால் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகின்றது. மேலும் அந்த பகுதி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் காணப்படுகிறது. இதையடுத்து உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மக்களே பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர்.
யோகி ஆதித்யாநாத் தாஜ்மஹால் செல்கிறார்
இந்த நிலையில் தற்போது தாஜ்மஹாலை பார்வையிடுவதற்காக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் சென்று இருக்கிறார். இது குறித்து யோகி ஆதித்யாநாத் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் "தாஜ்மஹாலை யார் கட்டியிருந்தாலும், அது இந்திய மக்களின் உழைப்பால் மட்டுமே உருவாகியிருக்கும். அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். அதற்காகத்தான் தாஜ்மஹாலுக்கு சுற்றிப்பார்க்க செல்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
தாஜ்மஹாலை கூட்டிய யோகி ஆதித்யாநாத்
இந்த நிலையில் வெறும் அரை மணி நேரத்தில் யோகி ஆதித்யாநாத் தாஜ் மஹாலில் நிறைய பணிகளை செய்து இருப்பதாக கூறப்பட்டது. தாஜ்மஹாலில் இருக்கும் அனைத்து சமாதிகளையம் பார்வையிட்ட அவர் அங்கு கட்டிடக் கலையை ரசித்து இருக்கிறார். மேலும் தாஜ்மகாலை சுற்றியுள்ள பகுதியை துடைப்பத்தால் கூட்டியிருக்கிறார். சர்ச்சைகள் எழுந்துள்ளதால் அதை சமாளிக்க யோகி அடித்த ஸ்டன்ட் இது என்று பார்க்கப்படுகிறது. ஸ்வச் பாரத் திட்டத்திற்காக பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை கையில் துடைப்பத்தை எடுத்து போஸ் கொடுத்தற்கு சமம் இது. ஏனெனில் தாஜ்மகால் போன்ற பெரிய பரப்பளவிலான ஒரு பகுதியை அரை மணி நேரத்தில் யோகி ஆதித்யநாத் எப்படி சுத்தம் செய்ய முடியும்? ஒரு சிறு வீட்டை சுத்தம் செய்யவே எவ்வளவு நேரம் செலவாகிறது என்பது தெரிந்த விஷயம். எனவே யோகி, சும்மா நாடகம் ஆடுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் எழுதி வருகின்றனர்.
நினைத்தது வேறு
மேலும், முதல்வரே சென்று தாஜ்மகாலை சுத்தம் செய்யும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமாக இருக்கிறதா என்ற கேள்வியை பொதுமக்கள் மனதில் இது விதைத்துவிட்டது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் இத்தனை நாட்களாக கவனிப்பாரற்று விடப்பட்டதா என்ற கேள்வியும் மக்களிடம் எழ, யோகி ஆதித்யநாத்தின் இந்த செயல்பாடு காரணமாகிவிட்டது. அவர் நினைத்தது ஒன்று, ஆனால் நடப்பது மற்றொன்றாக உள்ளது.