கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு- அமித் ஷாவுடன் இணையும் யோகி ஆதித்யாநாத்!
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி, பாஜக தலைவர் அமித் ஷாவுடன் இணைந்து கேரளா மாநிலத்தில் மக்கள் பாதுகாப்பு பேரணி என்ற தலைப்பில் அணிவகுப்பு நடத்த உள்ளனர்.
கண்ணூர்: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் கேரளாவில் நடக்கவிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணியில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக இன்று காலை அவர் கேரளா வந்தடைந்தார்.
இன்றிலிருந்து 7 நாட்கள் நடக்க இருக்கும் இப்பேரணிக்கு மக்கள் பாதுகாப்பு பேரணி என் பெயரிடப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூரின் பயனுரில் தொடங்கும் இப்பேரணி இம்மாதம் 17ம் தேதி திருவனத்தபுரத்தில் முடிவடையும்.
இன்று காலையில் தன்னுடைய 15 கிமீ நடை பயணத்தை தொடங்குவதற்கு முன் பேசிய யோகி ஆதித்யாநாத் , இனியொரு முறை கேரளாவில் அரசியல் சார்ந்த கொலை நடக்க விட மாட்டேன், எந்த ஒரு மரணம் ஆனாலும் அதை எதிர்த்து போரிடுவோம். இது ஆர்.எஸ்.எஸ்ன் வலிமையை காட்டும் பேரணி என்று கூறினார்.
பெரிய அளவில் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப் பேரணியில் ஏற்கனவே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இணைத்திருந்தார். கேரளாவில் பாஜகவின் வலிமையை காட்டும் விதத்திலும் இந்தப் பேரணி இருக்கப் போவதாகவும், இதுவரை இறந்த பிஜேபி உறுப்பினர்களின் மரணத்திற்கு தக்க பதிலாக இது இருக்கும் என்றும் ஏற்கனவே ராஜ்நாத் சிங் கூறி இருந்தார்.
மேலும் இப் பேரணியின் தொடக்கத்தில் பேசிய அமித் ஷா, கேரளத்தில் இதுவரை இறந்த 84 பாஜக கட்சிக்கார்களுக்கும் கேரளாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கேரளா முதல்வருமே காரணம், அவர்கள் இதற்கு தக்க பதில் அளித்தாக வேண்டும் என்று கூறினார். இந்த மக்கள் பாதுகாப்பு பேரணியில் காலையில் சில அசம்பாவிதங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.