கோரக்பூர் என்ன சுற்றுலா தலமா?...ராகுலை விளாசும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
டெல்லி இளவரசர் வந்து சுற்றிப் பார்க்க கோரக்பூர் ஒன்றும் சுற்றுலாத் தலமல்ல என்று ராகுல்காந்தியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
லக்னோ: கோரக்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரை ராகுல்காந்தி சந்திப்பது குறித்து விமர்சித்துள்ள உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூர் ஒன்றும் சுற்றுலாத் தலமல்ல அனைவரும் வந்து பார்த்து செல்ல என்று கூறியுள்ளார்.
கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த வாரம் சுமார் 71 குந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தணைத் தலைவர் ராகுல் காந்தி கோரக்பூர் வந்துள்ளார்.
ராகுல் பயணத்தை விமர்சித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், "டெல்லியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் இளவரசருக்கு, தூய்மை விழிப்புணர்வின் முக்கியத்துவம் தெரியாது. அவர் இது ஏதோ சுற்றுலாத் தலம் என்ற நினைத்துக் கொண்டு கோரக்பூர் வருகிறார், அதை எப்படி நாங்கள் அனுமதிப்போம்."
சவால்
கோரக்பூர் மற்றும் உபியின் கிழக்குப் பகுதி மக்களை காக்க பொறுப்பேற்று சவால் விடுபவர்கள், தாங்களாகவே முன் வந்து கொடிய நோய்களுக்கு ஆளாகி வரும் இந்த மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தூய்மையான உத்தரபிரதேசம், சுகாதாரமான உத்தரபிரதேசம் என்பதே நான் முன்எடுக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.
யார் காரணம்?
தன்னுடைய விழிப்புணர்வு பிரச்சாரம் என்செபாலிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை குறைக்கும். எங்களுக்கு முந்தைய அரசு மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாததே இந்த நிலைக்குக் காரணம் என்றும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
5 முறை எம்.பி.
சுத்தமின்மை, தேங்கும் நீராலேயே இந்த நோய் பரவுவதால் அதனை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் யோகி கூறியுள்ளார். தற்போது உத்தர பிரதேச மாநில முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் 5 முறை கோரக்பூர் லோக்சபா உறுப்பினராக இருந்துள்ளார்.
காங். குற்றச்சாட்டு
எதிர்க்கட்சியான காங்கிரஸ் யோகி ஆதித்யநாத் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றன. 71 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததே காரணம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.