மகாபாரதத்திலும் போருக்கு முன்பும் பேச்சுவார்த்தை நடத்துனாங்க.. அயோத்தி குறித்து உபி முதல்வர் யோகி
லக்னோ: அயோத்தி பிரச்சனையில் மத்தியஸ்தர்கள் நடத்திய சமரச பேச்சு தோல்வியடையும் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் பாபர் மசூதி விவகாரத்தில் இந்து அமைப்புகள் மற்றும இஸ்லாமிய அமைப்புகளுக்கிடையே நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வருகிறது.
அயோத்தி வழக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான வழக்கு என்பதால் நீதிமன்றம் கவனமாக கையாண்டு வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரித்து ராம் லல்லா, நிர்மோகி அக்காரா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகிய 3 அமைப்புகளுக்கு வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து பல தரப்பில் இருந்தும் மேல்முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் முதலில் சமரசமாக தீர்வு காண வேண்டும் என தெரிவித்தது. சம்மந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி முடிவு காண 3 பேர் கொண்ட குழுவை கடந்த மார்ச் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது.
5 மாதங்களாக மத்தியஸ்தர்கள் குழு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் அயோத்தி விவகாரத்தில் சரியான தீர்வை எட்டமுடியவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்தியஸ்தர்கள் குழு கைவிரித்தது. இதையடுத்து அயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினம் தோறும் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி அடையும் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான் என உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, அயோத்தி விவகாரத்தில் குழு அமைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியது நல்ல திட்டம் . ஆனால் இந்த பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடையும் என்பது முன் கூட்டியே எதிர்பார்த்த ஒன்று. மகாபாரதத்தில் கூட போருக்கு முன்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதுவும் தோல்விலேயே முடிந்தது. அது பயன் அளிக்கவில்லை என்றார்.