செல்பி எடுங்க.. தொண்டர்களுக்கு யோகி ஆதித்யநாத் கொடுத்த 'பலே' ஐடியா!
கோரக்பூர் தொகுதி எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை காட்டுவதற்காக, எய்ம்ஸ் மருத்துவமனை முன்பு நின்று செல்ஃபி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவு செய்யுமாறு தொண்டர்களை யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் பாராளுமன்றத் தொகுதியில் வரும் 19ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்காக, தேர்தல் பணிக்குழுவினர் மற்றும் தொண்டர்களுடனான கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யுக்திகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய யோகி ஆதித்யநாத்," நீங்கள் அனைவரும் கோரக்பூர் எய்மஸ் மருத்துமனை முன்பாக சென்று செல்ஃபி படம் எடுக்க வேண்டும். அதனை சமூக ஊடகங்களில் பதிவு செய்யுங்கள்.
அப்போதுதான் கோரக்பூர் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது வாக்காளர்களுக்கு தெரியும். மருத்துவ சிகிச்சைக்காக மும்பை, லக்ணோ மற்றும் டெல்லி உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
வீடு வீடாக சென்று பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேளுங்கள். நீங்கள் பணியாற்றும் வாக்குச்சாவடியில் வெற்றியை உறுதி செய்தாலே, இந்த தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுவிடும். நீங்கள் அனைவரும் அதிகபட்ச ஒத்துழைப்பை இந்த தேர்தலில் தர வேண்டும்.
அப்படி ஒரு மிடுக்கு.. துடிப்பு.. நடிப்பு.. இப்ப கம்பி எண்ணுறாரு.. தேவையா மாப்ளே இதெல்லாம்!
தேர்தல் தினத்தன்று வாக்குப்பதிவை அதிகரிக்க ஏழ்மையானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வந்து வாக்களிப்பதற்கு ஏதுவாக வாகனங்களை ஏற்பாடு செய்து தர வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் பாராளுமன்ற தொகுதி 30 ஆண்டுகளாக பாஜக.,வின் கோட்டையாக இருந்து வந்தது. யோகி ஆதித்யநாத் முதல்வராவதற்கு முன்பு இந்த தொகுதியிலிருந்து 5 முறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பாக அவரது குருவாக இருந்த மஹந்த் அவேத்யநாத் மூன்று முறை பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2017ல் யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்றதால், கோரக்பூர் எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால், காலியான அந்த தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், சாமஜ்வாடி சார்பில் போட்டியிட்ட பிரவீண் குமார் நிஷாத் வெற்றி பெற்றார்.
இதனால், பாஜக கடும் அதிர்ச்சி அடைந்தது. மேலும், இந்த தோல்வி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் தனிப்பட்ட முறையில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த முறை கோரக்பூர் தொகுதியை மீண்டும் கைப்பற்றி ஆக வேண்டிய கட்டாயத்தில் பாஜக வியூகங்களை வகுத்து வருகிறது.
கோரக்பூர் தொகுதியில் போஜ்புரி சினிமா நடிகர் ரவி கிஷனை வேட்பாளராக பாஜக நிறுத்தி இருக்கிறது. செல்ஃபி எடுத்து பதிவு செய்வது உள்ளிட்ட யுக்திகளை பின்பற்றி தேர்தலில் வெற்றி பெற பாஜக தொண்டர்களும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தீவிரமாக களம் இறங்கி இருக்கின்றனர்.