நாடாளுமன்றம் கட்டுவீங்க.. பிளேன் வாங்குவீங்க.. நேதாஜி நினைவகம் மட்டும் கட்ட முடியாதோ.. விளாசிய மமதா
கொல்கத்தா: இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது மேற்கு வங்க மாநிலம். எனவே, அங்கு சுபாஷ்சந்திரபோஸ் பெயரால், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அரசியலில் அடித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டன.
சுதந்திர போராட்ட தியாகி சுபாஷ் சந்திர போஸின் சொந்த மாநிலம் மேற்குவங்கம். இன்று அவரது 125வது பிறந்தநாள் விழா என்பதால் பிரமாண்ட ஏற்பாடுகளை மாநில அரசு செய்தது.
இந்த நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடி இன்று கொல்கத்தா விசிட் செய்துள்ளார். அவர் சுபாஷ் சந்திர போஸ் மியூசியம், தேசிய நூலகம், விக்டோரியா மெமோரியல் ஹால் ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
ஒரே மேடை
விக்டோரியா ஹாலுக்கு வெளியே நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், மமதா பானர்ஜியும் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தது கவனிக்கத் தக்கதாக இருந்தது.
தேசிய விடுமுறை
ஆனால் பிரதமர் வருகைக்கு முன்பாக நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியொன்றில் பாஜகவை விட்டு வாங்கிவிட்டார் மமதா பானர்ஜி. அவர் கூறியதை பாருங்கள்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் தினத்தை தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்கவில்லை. இதற்கு எனது எதிர்ப்புகளை பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.
நினைவக கட்டிடம்
புதிய நாடாளுமன்றத்தை கட்டுகிறீர்கள்.. புதிதாக விமானம் வாங்குகிறீர்கள்.. ஆனால் நேதாஜி பெயரில் ஒரு நினைவகம் கட்ட முடியாதா? சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் உள்ள துறைமுகத்தை சியாம பிரசாத் முகர்ஜி என்று பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்து உள்ளீர்கள்.
திட்ட கமிஷன்
கொல்கத்தா விமான நிலையத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மூலமாக சூட்ட வைத்தது நான்தான். நேதாஜியின் எண்ணத்தில் உதித்தது தான் திட்ட கமிஷன். ஆனால் அதை கலைத்துவிட்டு நிதி ஆயோக் என்ற பெயரில் ஒரு அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தி விட்டது. மறுபடியும் திட்டக் குழு அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்தார்.