நாடாளுமன்றத்தில் தொடர் அமளி: மக்களின் பொறுமையை சோதிக்காதீர்கள்’ - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
நாட்டு மக்களின் பொறுமையை சோதிக்காதீர்கள்’ என்று ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி : நாடாளுமன்றத்தில் அமளி நீடித்ததால் மக்களின் பொறுமையை சோதிக்காதீர்கள் என எச்சரிக்கை விடுத்தார் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மாதம் ஐந்தாம் தேதி முதல் கூடியது. அப்போதில் இருந்தே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஏற்படுத்தி வந்ததால், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
காவிரி விவகாரத்தை வலியுறுத்தி தமிழக அதிமுக எம்பிக்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திர தெலுங்கு தேச கட்சி எம்பிக்களும் தொடர்ந்து அமளி ஏற்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் ராஜ்யசபா கூடிய நிலையில் காவிரி விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அவையை நடத்தவிடாமல் செய்தன. இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அப்போது பேசிய ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பித்ததில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தக்கூட்டத்தொடரில் இதுவரை ஒரு மசோதா கூட தாக்கல் செய்யப்படவில்லை. இது மிகவும் மோசமான நிலை. இந்த நாடும் மக்களும் வளர்ச்சியை விரும்புகிறார்கள். ஆனால், நீங்கள் அனைவரும் மக்களின் பொறுமையை சோதிக்கிறீர்கள்.
இந்த அவையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. எனவே, தயவு செய்து அமளியில் ஈடுபடாதீர்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.