உங்கள் ஆட்சியில் ஒரு ராமர் கோயிலாவது கட்டினீர்களா? மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி!
கொல்கத்தா: "ராமர் பெயரை சொல்லியே ஆட்சியை பிடித்த பாஜக, இதுவரை ஒரு ராமர் கோயிலையாவது கட்டியுள்ளதா?", என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. ஃபானி புயல் நிவாரணம் தொடர்பான நடவடிக்கைகளில் இருவருக்கும் கடுமையான மோதல் நீடித்து வருகிறது.
இருவரின் மோதலால் மேற்கு வங்க புயல் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. புயல் நிவாரணப் பணிகளில் மத்திய அரசின் உதவி தேவையில்லை. மாநில அரசே பார்த்துக் கொள்ளும். மோடியை இந்நாட்டின் பிரதமராக கருதவில்லை. அடுத்து வரும் பிரதமரிடம் பேசிக் கொள்கிறோம்," என்று மம்தா பானர்ஜி அதிரடியாக கூறி இருக்கிறார்.
இந்த நிலையில், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில்," தேர்தல் வரும்போதெல்லாம் ராமச்சந்திரன் பெயரை சொல்லியே ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்கிறது. ராமரை தேர்தல் முகவர் போல பாஜக பயன்படுத்துகிறது.
தலைமை நீதிபதிக்கு எதிரான விசாரணை அறிக்கை வெளியாகாதது ஏன்? இந்திரா ஜெய்சிங் வழக்கில் நடந்தது என்ன?
தேர்தல் நேரத்தில் "ஜெய் ஸ்ரீராம்" என்று கூறி ஓட்டுக்களை பெற நினைப்பதோடு அல்லாமல், எல்லோரையும் அவ்வாறு கூற வேண்டும் என்று பாஜக கட்டாயப்படுத்துவது ஏன் என்று அவர் வினவியுள்ளார். ராமர் பெயரை சொல்லி ஆட்சியை பிடிக்கும் உங்களது ஆட்சியில் ஒரு ராமர் கோயிலாவது கட்டப்பட்டுள்ளதா? என்று மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
"மோடி சொல்லும் கோஷங்களை எல்லோரும் முழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ராமரை நாங்கள் மதிக்கிறோம். ராமருக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்," என்று கூறி இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, சிலர் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷ மிட்டனர். இதனால், மம்தா பானர்ஜி கடும் ஆத்திரம் அடைந்தார். இதுபோன்று கோஷமிடுவதை தவிர்க்கமாறும் கூறினார். மேலும், கோஷமிட்டதாக கருதப்படும் ஐந்து பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்து, மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார். தற்போது மோடியின் விமர்சனத்திற்கு மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.