எங்களை விடுறீங்க.. உங்க ஊர் ஆட்களையும் விடுங்க.. காஷ்மீர் சென்ற ஐரோப்பிய எம்பி பகீர் பேட்டி!
காஷ்மீருக்குள் ஐரோப்பிய எம்.பி.க்களை அனுமதிக்கும் அரசு, தங்கள் நாட்டின் எதிர்கட்சிகளையும் அனுமதிக்கலாம் என்று ஐரோப்பிய யூனியன் எம்.பி. நிகோலஸ் ஃபெஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்: காஷ்மீருக்குள் ஐரோப்பிய எம்.பி.க்களை அனுமதிக்கும் அரசு, தங்கள் நாட்டின் எதிர்கட்சிகளையும் அனுமதிக்கலாம் என்று ஐரோப்பிய யூனியன் எம்.பி. நிகோலஸ் ஃபெஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் நிலையை தெரிந்து கொள்வதற்காக ஐரோப்பாவை சேர்ந்த பாராளுமன்ற குழு ஒன்று இந்தியா வந்தது. இவர்கள் நேற்று காஷ்மீரை பார்வையிட்டனர். ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு பின் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது.
அங்கு தலைவர்கள் பலர் இன்னும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் அங்கு முழுமையாக தகவல் தொடர்பு அளிக்கப்படவில்லை. அதேபோல் அங்கு இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை.
முக்கியமான பகுதி
இந்த நிலையில்தான் 22 பேர் கொண்ட ஐரோப்பா எம்பிக்கள் குழு காஷ்மீரில் நேற்று பல்வேறு முக்கியமான பகுதிகளை பார்வையிட்டனர். நேற்று இவர்கள் பெரிய அளவில் மக்களிடம் பேசவில்லை. அதே சமயம் முக்கியமான சுற்றுலாதலங்களை இவர்கள் நேரில் பார்வையிட்டனர். இவர்களுடன் ராணுவம் பாதுகாப்பாக சென்றது.
எப்படிப்பட்ட பயணம்
இது அதிகாரபூர்வமற்ற பயணம் ஆகும். ஆகவே இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் யாரும் அறிக்கை வெளியிட மாட்டார்கள். அதேபோல் ஐரோப்பிய யூனியனுக்கு இது தொடர்பாக எந்த விதமான அதிகாரபூர்வ தகவலும் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.
வலதுசாரி எம்பிக்கள்
இந்த பயணத்திற்கு பெரும்பாலும் வலதுசாரி எம்பிக்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 22 பேரில் 19 பேர் வரை வலதுசாரி கொள்கை கொண்ட எம்பிக்கள். இந்த தேர்வு சர்ச்சையை எழுப்பி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
என்ன குறிப்பிட்டார்
இந்த நிலையில் காஷ்மீரை பார்வையிட்ட ஐரோப்பிய யூனியன் எம்.பி. நிகோலஸ் ஃபெஸ்ட் முக்கியமான விஷயம் ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அதில், காஷ்மீருக்குள் ஐரோப்பிய எம்.பி.க்களை அனுமதிக்கும் அரசு, தங்கள் நாட்டின் எதிர்கட்சிகளையும் அனுமதிக்கலாம். அதில் எதோ குழப்பம் நீடிக்கிறது. அரசு இதை உடனே பரிசீலிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.