உபேர் டாக்சி ஆபீஸை கண்டுபிடிக்க டெல்லி போலீஸ் பட்ட பாட்டைப் பாருங்க!
டெல்லி: டெல்லியை உலுக்கியுள்ள உபேர் டாக்சி டிரைவரின் பாலியல் பலாத்கார வழக்கில், அந்த டாக்சி நிறுவனத்தின் அலுவலகத்தைக் கண்டுபிடிக்க டெல்லி போலீஸார் கடுமையாக திணறிப் போயுள்ளனர்.
இதுகுறித்து வடக்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் மதுர் வர்மா கூறுகையில் முதலில் இந்த உபேர் நிறுவனம் எங்கிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்து ஆன்லைனில் தகவல் தேடினோம். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அந்த நிறுவனத்தின் அலுவலகம் எங்கே இருக்கிறது என்பது குறித்த விவரம் தெரியவில்லை. எங்களுக்கு எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.
மேலும் எந்தக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவது என்பதிலும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ளது என்று எங்களுக்குத் தெரியவந்தது. ஆனால் நாங்கள் டெல்லி முகவரியைத் தேடி வந்தோம்.
எங்களுக்கு சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்குப் புகார் வந்தது. புகார் கொடுத்த பெண்ணை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலையும் இருந்தது. எங்களது தேடுதலில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
இதையடுத்து டெல்லி போலீஸார் இணையதள தேடுதலை விட்டு விட்டு தெருவில் இறங்கினர். உபேர் கால் டாக்சி நிறுவனத்தின் ஆப்பை முதலில் டவுன்லோடு செய்தனர். பின்னர் Paytm கணக்கை ஆக்டிவேட் செய்தனர். உபேர் டாக்சிக்கான கட்டணத்தை Paytm மூலமாகத்தான் செலுத்த முடியும். இதையடுத்து ஒரு டாக்சியை புக் செய்தனர்.
அதன் பின்னர் ஒரு உபேர் டாக்சி போலீஸார் சொன்ன முகவரிக்கு வந்து சேர்ந்தது. அந்த டாக்சியின் டிரைவரைப் பிடித்த போலீஸார், அவரிடம் உபேர் நிறுவன அலுவலகத்திற்குக் கூட்டிக் கொண்டு போகுமாறு கூறியுள்ளனர். அவரும் குர்கானில் உள்ள அலுவலகத்திற்குக் கொண்டு போய் விட்டார். அதன் பிறகுதான் குற்றவாளி டிரைவர் குறித்த விவரம் போலீஸாருக்குத் தெரிய வந்தது.