குட்டிப்பையன் முன்பாக குனிந்து வணக்கம் தெரிவிக்கும் மோடி.. ஏன் இந்த போட்டோ வைரலாகிறது தெரியுமா?
டெல்லி: 4 நாள் பயணமாக, இந்தியா வந்துள்ள பூட்டான் அரச குடும்பம் குறித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக சுற்றி வருகின்றன.
குறிப்பாக குட்டி இளவரசன் புகைப்படம்தான் இதில் மையப்புள்ளியாக உள்ளது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முதல் பிரதமர் மோடி வரையிலான முக்கிய பிரமுகர்கள், குட்டி இளவரசனிடம் அன்பாக நடந்து கொண்ட படங்கள் வைரலாக சுற்றி வருகின்றன.
குறிப்பாக குட்டி இளவரசன் முன்னிலையில், பிரதமர் மோடி குனிந்து நின்று வணக்கம் சொல்வது, ஃபுட்பால், செஸ் போர்டு ஆகியவற்றை பரிசாக வழங்கியது ஆகியவையும் இப்போது ஹாட் டாப்பிக்காக வலம் வருகின்றன.
|
டோக்லாமுக்கு பிறகு
சீனாவுடனான டோக்லாம் எல்லை பிரச்சினைக்கு பிறகு, பூட்டான் நாட்டு மன்னர் முதல் முறையாக இந்தியாவுக்கு குடும்பத்தோடு விஜயம் செய்துள்ளார். 4 நாள் அரசு முறை பயணமாக பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கேல் தனது மனைவி, மகனுடன் வந்துள்ளார்.
|
சுஷ்மா உற்சாக வரவேற்பு
டெல்லி விமான நிலையத்திற்கே சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மன்னர் குடும்பத்தை வரவேற்றார். இரண்டரை வயதாகும், குட்டி இளவரசும், ராணியுடன் வந்திருந்தார். குட்டி இளவரசனின் கையை பிடித்து சுஷ்மா நடந்து வரும் படங்களை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
|
கால்பந்து, செஸ் பரிசு
இந்த நிலையில் மன்னர் குடும்பத்தார் பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது, மோடி, இளவரசருக்கு, பிஃபா அமைப்பின் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான அதிகாரப்பூர்வ கால்பந்தையும், செஸ் செட்டையும் பரிசாக அளித்தார். மேலும் சிறுவனின் முன்பாக குனிந்து நின்று வணக்கம் தெரிவித்தார். இந்த போட்டோ வைரலாக காரணம், சிறுவனின் பூட்டான் முகசாயலிலான அந்த க்யூட்னெஸ் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
நட்பை எடுத்துக்காட்டுகிறது
இதேபோல பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், குட்டி இளவரசருக்கு விளையாட்டு பொம்மைகளை கொடுத்து விளையாடச் செய்தார். இந்த படமும் வைரலாகிறது. பூட்டான் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றதாகவும், இரு நாட்டு நட்பை இது எடுத்துக் காட்டுவதாக இருந்ததாகவும் புகழாரம் சூட்டியுள்ளது.