'எங்கள் கிராமத்தை வந்து பாருங்கள் சார்..' பிரதமர் மோடிக்கு ஒடிசா சிறுவன் உருக்கமான கடிதம்
ஒடிசாவை சேர்ந்த 10 வயது சிறுவன் தனது கிராமத்தை நேரில் வந்து பார்க்குமாறு கடிதம் எழுதியுள்ளான்.
புவனேஸ்வர்: ஒடிசாவில் வேகமாக பரவி வரும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதம் மூலமாக சிறுவன் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளான்.
ஒடிசாவில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. என்சிபாலிட்டிஸ் என்ற வைரசால் ஏற்படும் இந்த ஜப்பானிய மூளைக்காய்ச்சலின் அறிகுறி 5 முதல் 15 நாட்களுக்கு பிறகே தெரியவரும். பன்றிகள் மற்றும் பறவைகளிடமிருந்து தோன்றிய இந்த வைரஸ் தற்போது கொசு மூலம் மனிதர்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது.
இந்த காய்ச்சல் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கு மல்காங்கிரி மாவட்டத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை குறிவைத்து தாக்கும் இந்த காய்ச்சலுக்கு இதுவரை 80 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் போல்கண்டா தொடக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் உமேஷ் மாதி என்ற சிறுவன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான். அதில் தனது கிராமத்தில் பரவி வரும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளான். எங்களைக் காப்பாற்றுங்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் என்னுடன் படிக்கும் சக மாணவர்கள் இறந்துவிட்டனர். உலகம் முழுவதும் செல்லும் நீங்கள் எங்கள் கிராமத்துக்கு வந்து குழந்தைகளின் நிலையை நேரில் பார்க்க வேண்டும் எனஉருக்கமாக எழுதியுள்ளான்.சிறுவனின் இந்த கடிதத்தைப் பற்றிதான் தற்போது சமூக வலைதளங்களில் ஒரே பேச்சாக உள்ளது.