காஷ்மீரில் தீவிரவாதியாகி சில வாரங்களே ஆன முன்னாள் கால்பந்து வீரர் ராணுவத்திடம் சரண்
தீவிரவாதியாக மாறிய கால்பந்துவீரர் காஷ்மீரில் ராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
காஷ்மீர் : காஷ்மீரில் தீவிரவாதியாக மாறிய கால்பந்துவீரர் மனம் திருந்தி ராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஜித் இர்ஷத் கான். இவர் அந்த மாவட்டத்தின் உள்ளூர் கால்பந்து அணியின் பிரபல வீரர். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போனார். இர்ஷத் கான் தன் பெயரை அபு இஸ்மாயில் என்று மாற்றிக்கொண்டு லக்ஷர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தில் இணைந்துவிட்டதாக அவர் துப்பாக்கி ஏந்தியடி இருக்கும் புகைப்படத்தோடு அந்த இயக்கம் செய்தி வெளியிட்டது.
இதனால் அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் இர்ஷத் கான் அனந்த்நாக் ராணுவ முகாமில் சரணடைந்தாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது ராணுவ விசாரணையில் இருப்பதாகவும், விரைவில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ராணுவ அதிகாரிகள், இர்ஷத் சில நாட்களே தீவிரவாதிகளோடு இருந்துள்ளார். அதனால் அவருக்கு தண்டனை எதுவும் இல்லை.
மேலும் தீவிரவாதத்தில் இருந்து திரும்ப நினைக்கும் பலருக்கும் இவர் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும். அதனாலேயே இவரை விடுதலை செய்ய இருக்கிறோம். இதுபோன்ற அப்பாவி இளைஞர்கள் தேவையில்லாமல் குண்டடிப்பட்டு சாவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.