அடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரி விழுது பாருங்க.. கான்பூரிலும் ஒரு "கோவை சரளா"!
2 பேர் கற்பழிக்க முயன்றதால் செருப்பால் அடித்து போலீசில் ஒப்படைத்தார் இளம்பெண்.
கான்பூர்: நம்ம ஊர் கோவை சரளா மாதிரி நாடெல்லாம் அங்கங்கே இருப்பாங்க போல! வம்பு பண்ணும் ஆண்களுக்கு அடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரி விழுது!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஈட்டா என்ற பகுதி உள்ளது. இதன் அருகே உள்ள கிராமத்துக்கு இளம் பெண் ஒருவர் தனியாக நடந்து போய் கொண்டிருந்தார். அப்போது அவரை 2 ஆண்கள் கேலி கிண்டல் செய்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த பெண் அதை பொருட்படுத்தாமல் அமைதியாக சென்று கொண்டிருந்தார். அமைதியாக போவதை கவனித்த 2 பேரும் இளம்பெண்ணை திடீர் என வழிமறித்துள்ளனர். அதோடு அவரை கற்பழிக்கவும் முயன்றனர்.
சந்திரமுகியாக மாறினார்
அதுவரை அமைதியாக இருந்த அந்த பெண் அப்போதுதான் சந்திரமுகியாக மாறினார். 2 பேரையும் இழுத்து பிடித்து நடுரோட்டிலேயே அடிக்க ஆரம்பித்துவிட்டார். சரமாரியாக பெண் தாக்குவதை அந்த இளைஞர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இருவரையும் மாறி மாறி தெருவிலேயே கைகளாலும், கால்களாலும் புரட்டி புரட்டி எடுத்தார்.
செருப்பால் அடித்தார்
பிறகு விட்டுவிடுவார் என்று பார்த்தால், அப்போதுதான் அந்த பெண் அவரது செருப்பையே கழட்டுகிறார். கொஞ்ச நேரம் செருப்பால் இளைஞர்களை இன்னும் வெளுத்தார். "எங்களை விட்டு விடு.. தெரியாம பண்ணிட்டோம்.." என்று இருவரும் அந்த பெண்ணிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டார்கள். இத்தனைக்கும் இந்த சம்பவம் நடந்தது பகல் நேரம் என்பதால் ஊரே ஒன்றுகூடி விட்டது.
சிறை பிடித்தனர்
எல்லோரும் வேடிக்கை பார்க்க பார்க்க இளைஞர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. அடி தடி காட்சிகள் எல்லாம் முடிந்த பிறகு ஊர் மக்கள் அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்தார்கள். இளைஞர்களை சிறைபிடித்து கட்டி போட்ட மக்கள், போலீசுக்கு தகவல் அளித்தார்கள்.
வீடியோ வைரல்
விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு கைது செய்து அழைத்து சென்றார்கள். பலாத்காரம் செய்ய வந்த 2 பேரை இளம்பெண் தெருவில் புரட்டி புரட்டி செருப்பால் அடித்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது!