செல் நம்பர் தர மறுத்த தோழி... பழிவாங்க பேஸ்புக்கில் ஆபாசபடம் வெளியிட்ட வாலிபர் கைது
உடுப்பி: செல்போன் நம்பரை கொடுக்க மறுத்த இளம்பெண்ணுக்கு ‘பேஸ்புக்'கில் ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்த இளைஞரை உடுப்பி போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் டவுன் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (32) என்ற இளைஞர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பேஸ்புக் சமூக வலைதளம் மூலமாக உடுப்பியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கும் மேலாக பேஸ்புக் வாயிலாகவே அவர்கள் இருவரும் தங்களது நட்பை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் தனது பேஸ்புக் தொழியிடம் செல்போன் எண்ணைக் கேட்டு நச்சரித்துள்ளார் மஞ்சுநாத். ஆனால், அப்பெண் தந்து கைப்பேசி எண்ணை தர மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுநாத், பேஸ்புக் வாயிலாகவே தோழியை தாறுமாறாக திட்டியுள்ளார். இதனால், தனது நண்பர்கள் பட்டியலில் இருந்து மஞ்சுநாத்தை நீக்கி விட்டார் இளம்பெண்.
ஆனபோதும், தொடர்ந்து தோழியின் பேஸ்புக் பக்கத்தில் ஆபாச படங்கள் மற்றும் அவதூறு கருத்துக்களை அனுப்பி தொந்தரவு அளித்துள்ளார் மஞ்சுநாத்.
இது தொடர்பாக ஆதாரத்துடன் உடுப்பு போலீசில் புகார் அளித்துள்ளார் அப்பெண். இதையடுத்து, மஞ்சுநாத்தை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்ட போலீசார், அப்பெண் மூலமாகவே வலை விரித்துள்ளனர்.
அதன்படி சுமித்ரா, மஞ்சுநாத்தின் பேஸ்புக்கில், ‘உங்களை பார்க்க விரும்புகிறேன்' என்று தகவல் அனுப்பியுள்ளார். அதை நிஜமென நம்பிய மஞ்சுநாத், தோழியைப் பார்க்க நேற்று முன்தினம் உடுப்பிக்கு வந்தார்.
அப்போது போலீசார் மஞ்சுநாத்தை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக உடுப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து, மஞ்சுநாத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேஸ்புக்கில் நட்பு பாராட்டிய இளம்பெண் செல்போன் நம்பர் கொடுக்காத காரணத்தால், அவருக்கு ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் உடுப்பியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.