மும்பை: ஆங்கிலத்தில் பேசியதால் கடுப்பான இளைஞர் - உயிர் நண்பனை 54 முறை கத்தியால் குத்தி கொன்றார்
மும்பையில் ஆங்கிலத்தில் பேசி வெறுப்பேற்றிய உயிர் நண்பனை 54 முறை கத்தியால் குத்தி இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : ஆங்கிலத்தில் பேசி அடிக்கடி வெறுப்பேற்றி வந்த உயிர்நண்பனை இளைஞர் ஒருவர் 54 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் உள்ள சாஹூ நகரில் வசித்து வந்த இளைஞர் அப்துல் வாகித் ரஹின், அவரது உயிர் நண்பர் ஷேக். அவரைத்தான் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணையில் ரஹின் அளித்த வாக்குமூலத்தில், நானும் என் நண்பனும் ஷேக்கும் மாஹிம் பகுதியில் வசிக்கிறோம். நான் பள்ளிக்கல்வியை சரியாக முடிக்கவில்லை. அதனால், எனக்கு ஆங்கிலம் சரியாக வராது. ஆனால், என் நண்பன் ஷேக் படித்துள்ளதால், அவன் ஆங்கிலம் நன்றாகப் பேசுவான்.
அடிக்கடி என்னைக் கிண்டல் அடிக்கும் விதமாக என்னிடம் ஆங்கிலத்தில் பேசுவான் ஷேக். அது பிடிக்காமல் அவனை நான் பலமுறை கண்டித்துள்ளேன். அவன் என்னிடம் ஆங்கிலத்தில் பேசும்போது நான் படிக்காததை சுட்டிக்காட்டி, கிண்டல் அடிப்பதைப் போல இருக்கும்.
அதனால் நான் வெறுப்படைந்துள்ளேன். கடந்த புதன்கிழமை இருவரும் மது அருந்தச் சென்ற போது, போதையில் ஷேக் என்னிடம் வழக்கம் போல ஆங்கிலத்தில் பேசினான். அதனால் கோபமடைந்த நான், அவன் சிறுநீர் கழிக்கச் சென்றபோது, பின்னாலேயே சென்று அவனைக் கத்தியால் குத்தினேன்.
வலியால் அவன் துடித்த போதும், மதுபோதையில் இருந்த எனக்கு வெறி அடங்கவில்லை. அதனால் அவன் கழுத்து, தலை, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் 54 முறை கத்தியால் குத்திக்கொன்றதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி இருந்த ஷேக்கின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீஸார், ரஹினை சிறையில் அடைத்துனர்.
ஆங்கிலம் பேசிய காரணத்திற்காக உயிர் நண்பனை இளைஞர் ஒருவர் 54 முறை குத்திக் கொலை செய்த சம்பவம் மும்பைப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.