ராஜ்யசபா தேர்தலில் எம்எல்ஏக்கள் வாக்குகளுக்கு மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது? எவ்வளவு ஆதரவு தேவை?
டெல்லி: பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, காலியாக உள்ள 58 ராஜ்யசபா இடங்களுக்குதான் இன்று தேர்தல் நடைபெற உள்ளது.
உத்தரபிரதேசத்தில் இருந்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி போட்டியிடுகிறார். ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ராஜ்யசபா தேர்தல்கள் கவனம் ஈர்க்கின்றன.
ராஜ்யசபாவில் பெரும்பான்மை
21 மாநிலங்களில் பாஜக கூட்டணி அரசு நடைபெறுகிறது. 15 மாநிலங்களில் பாஜக முதல்வர்கள் ஆள்கிறார்கள். இருப்பினும் ராஜ்யசபாவில் பாஜக இன்னும் பெரும்பான்மை உறுப்பினர் பலத்தை பெற முடியவில்லை. 245 உறுப்பினர்களை கொண்ட ராஜ்யசபாவில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 83 உறுப்பினர் பலம் உள்ளது. அதில் பாஜகவுக்கு மட்டும் இருப்பது உறுப்பினர்கள் 58 மட்டுமே.
எம்எல்ஏக்கள் ஓட்டு
எம்.எல்.ஏக்கள் வாக்குகள் அடிப்படையில் ராஜ்யசபாவுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பாஜக கூட்டணி பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியில் உள்ளபோதும்கூட, ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவி காலம் காலியான பிறகுதான் அதாவது சுமார் 2 வருடங்களுக்கு ஒருமுறைதான், மொத்த எம்.பி.க்களின் மூன்றில் ஒரு பங்கினர் ஓய்வு பெற்று, அந்த இடங்களுக்கு வாக்கெடுப்பு நடைபெறும் என்பதால் பாஜக உடனடியாக ராஜ்யசபாவிலும் பெரும்பான்மை பெற முடியவில்லை.
வாக்களிப்பு ஃபார்முலா
எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையை 100-ஆல் பெருக்கி, அதை காலியிடங்கள் எத்தனையோ அந்த எண் மற்றும் அதனுடன் ஒன்றை கூட்ட வேண்டும். அப்படி வரும் கூட்டுத்தொகையை கொண்டு, 100ஆல் பெருக்கி வரும் எண்ணை வகுக்க வேண்டும். வகுத்து வரும் தொகையில் ஒன்றை கூட்ட வேண்டும். அதுதான் ஓட்டு மதிப்பு. உதாரணத்திற்கு, உ.பி.யில் மொத்தம் 403 எம்எல்ஏக்கள் உள்ளனர். அந்த எண்ணிக்கையை 100ஆல் பெருக்க வேண்டும். அந்த தொகையை காலியிடங்களான 10+1 அதாவது 11-ஆல் வகுக்க வேண்டும். வகுத்து வரும் எண்ணில் ஒன்றை கூட்ட வேண்டும். [(403 X 100) / (10+1)] + 1 = 3,664. இதன்படி, 3664 வாக்குகள் தேவை. இதனால்தான், ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒரு எம்பியை தேர்ந்தெடுக்க தேவைப்படும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை மாறுபடும்.
உத்தரபிரதேசம்
பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 10 ராஜ்யசபா இடங்கள் காலியாகியுள்ளன. அதில் பாஜக 8 எம்பிக்களையாவது வெல்லும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு வேட்பாளருக்கும் 37 எம்.பிக்கள் ஆதரவு தேவை. பீகாரில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியால் தலா 3 எம்.பிக்களை பெற முடியும். ஒவ்வொரு வேட்பாளருக்கும் 35 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம்
மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 6 இங்களில் பாஜக 2 பேரையும், சிவசேனா ஓரு வேட்பாளரையும் ராஜ்யசபா அனுப்ப முடியும். இங்கு ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 42 எம்எல்ஏக்கள் வாக்குகள் தேவை. மேற்கு வங்கத்தில் 5 இடங்கள் காலியாக உள்ளன. ஒவ்வொரு உறுப்பினருக்கும் 50 எம்எல்ஏக்கள் வாக்குகள் தேவை. 213 எம்எல்ஏக்கள் கொண்டுள்ள 4 உறுப்பினர்களை ராஜ்யசபா அனுப்ப முடியும். திரினாமுல் காங்கிரசிடம் எஞ்சும் 13 வாக்குகள் அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசமுள்ள 26 எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றால் 42 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரசால் ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடியும்.
குஜராத் நிலை
குஜராத்தில் 4 இடங்கள் காலியாக உள்ளன. தலா 37 எம்எல்ஏக்கள் வாக்குகள் தேவை. 99 உறுப்பினர்களை கொண்ட பாஜக இரு ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க முடியும். 78 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரசும் 2 எம்.பிக்களை தேர்ந்தெடுக்க முடியும்.
கர்நாடகாவில் காங்கிரஸ் வலு
கர்நாடகாவில் 4 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. தலா 46 எம்எல்ஏக்கள் வாக்குகள் தேவை. 124 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் 2 எம்.பி.க்களை தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும். பாஜக ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க முடியும். மத்திய பிரதேசத்தில் 5 இடங்கள் காலியாக உள்ளன. தலா 39 எம்எல்ஏக்கள் வாக்குகள் தேவை. 4 எம்.பிக்களை பாஜக தேர்ந்தெடுக்க முடியும். காங்கிரஸ் ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க முடியும்.
ஒடிசா, தெலுங்கானா
ஒடிசாவில் 3 எம்.பி. பதவியிடங்கள் காலியாகின்றன. ஒரு எம்.பி.க்கு தலா 37 எம்எல்ஏக்கள் வாக்குகள் தேவை. 118 எம்எல்ஏக்களை கொண்ட பிஜு ஜனதாதளம் 3 எம்.பி.க்களை அனுப்ப முடியும். தெலுங்கானாவில் காலியாக உள்ள 3 இடங்களிலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி வெல்ல முடியும். ராஜஸ்தானில் 3 இடங்கள் காலியாக உள்ளன. தலா 51 எம்எல்ஏக்கள் வாக்குகள் தேவை. 159 எம்எல்ஏக்களை கொண்ட பாஜக 3 எம்.பி.க்களையும் வெற்றிபெறச் செய்ய முடியும்.
ஆந்திரா, கேரளா
ஆந்திர பிரதேசத்தில் 3 தொகுதிகள் காலியாக உள்ளன. தலா 44 எம்எல்ஏக்கள் வாக்குகள் தேவை. தெலுங்கு தேசம் 2 எம்.பிக்களையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஒருவரையும் வெல்ல வைக்க முடியும். ஜார்கண்டில் 2 இடங்கள், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், மற்றும் சட்டீஸ்கரில் தலா ஓரிடத்திற்கு தேர்தல். கேரளாவில் ஒரு எம்.பியை தேர்ந்தெடுக்க 71 எம்எல்ஏக்கள் வாக்குகள் தேவை. 90 எம்எல்ஏக்களை கொண்ட ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி எளிதில் வெல்லும்.
தேர்தல் மாநிலங்கள்
எனவே, 58 பேரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில், 10 மாநிலங்களில் 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். இன்று அது முறைப்படி அறிவிக்கப்படும். எஞ்சிய 25 பதவிகளுக்குத்தான், 6 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அவை, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா.