உங்கள் வேலை நாட்டுக்கு தீ வைப்பது கிடையாது.. மமதா ஆவேச பேச்சு
கொல்கத்தா: உங்களது பணி இந்த நாட்டுக்கு நெருப்பு வைப்பது கிடையாது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில் இன்று மமதா பானர்ஜி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், குடியுரிமையை நிரூபிப்பதற்கு வேறு எந்த ஆவணமும் போதாது. பிறப்பு சான்றிதழ் தேவை என்று பாஜக அரசு கேட்கிறது. இதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.
யாருடைய குடியுரிமையும் போகாது என்று ஒரு பக்கம் சொல்கிறீர்கள், ஆனால் ஆதார் அட்டை, பான் அட்டை போன்ற எதுவும் செல்லுபடியாகாது என்றும் கூறுகிறீர்கள். ஆதார் திட்டத்திற்கு ஆறாயிரம் கோடி ரூபாயை செலவு செய்தீர்களே. போன், வங்கி கணக்கு உள்ளிட்ட பலவிஷயங்களுடன் ஆதாரை இணைத்தீர்கள். இப்போது வேண்டாம் என்கிறீர்கள்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: 2-வது நாளாக போராடும் சென்னை பல்கலை. மாணவர்களுடன் கமல் சந்திப்பு
பாஜகவிடம் இருந்து இந்திய குடிமகன் என்ற சான்றிதழ் பெற்று அதை காண்பிப்பது தான் செல்லுபடியாகும் என்று சொல்ல வருகிறீர்களா? பாஜக ஒரு வாஷிங் மெஷின் போல மாறி விட்டதா? நீங்கள்தான் சலவை செய்து கொடுப்பீர்களா.
அமித்ஷா பாஜக கட்சியின் தலைவர் மட்டும் கிடையாது. இந்த நாட்டின் உள்துறை அமைச்சர். எனவே நாட்டில் அமைதியை நிலவச் செய்வதுதான் உங்களது பணியாக இருக்கவேண்டும். நெருப்பை பற்ற வைப்பது கிடையாது. நீங்கள் முன்வைக்கும் கோஷத்துக்கு ஏற்ப நடந்து கொண்டதே கிடையாது. அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்கும் சம பங்கு என்று தெரிவித்தீர்கள். ஆனால் அதற்கு நேர் எதிரான சட்டதிட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறீர்கள். இவ்வாறு மமதா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்தார்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டேன் என்று ஏற்கனவே மமதா பானர்ஜி திட்டவட்டமாக அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.