இன்று கல்பர்கி, நாளை பக்வான்.. எழுத்தாளருக்கு டிவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
பெங்களூர்: இந்துத்துவாவை விமர்சனம் செய்த எழுத்தாளரை டிவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்த பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் தார்வாரை சேர்ந்த எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி நேற்று காலை அவரது வீட்டில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் மங்களூரை சேர்ந்த பஜ்ரங்தள் அமைப்பு ஆதரவாளர் புவித் ஷெட்டி என்பவர் தனது டிவிட்டர் தளத்தில், "இந்துத்துவாவை மோசமாக பேசிய எழுத்தாளர்களான அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி இறந்தனர். இனி அடுத்தது பக்வான்தான்" என்று தெரிவித்திருந்தார்.
இத்தகவல் மீடியாக்களுக்கும் தெரியவந்தது. காவல்துறைக்கும் தெரியவந்தது. எனவே காவல்துறை மீடியா செய்தி ஆதாரத்தை கொண்டு, தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது. இந்திய தண்டனை சட்டம் 506 மற்றும் 153ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார் இன்று புவித் ஷெட்டியை கைது செய்தனர். அவர் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்தானா, அவரது கோபத்துக்கு என்ன காரணம் என்பவை குறித்து விசாரணை நடக்கிறது.
முன்னதாக, எதிர்ப்பு வலுத்ததால் தனது டிவிட்டை அவர் டெலிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.