இந்த காதலை விவரிக்க வார்த்தைகளே கிடையாது... உருக வைத்த ஒரு இளைஞனின் மரணம்!
காதலிக்காக தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இளைஞர் உயிரிழந்தார்.
Recommended Video
போபால்: "உள்ளம் மட்டுமே காதல் என்றால் நீ காதலிக்க ஒரு நாய்க்குட்டி போதும்.. உடல் மட்டுமே காதல் என்றால் நீ காதலிக்க ஒரு விலைமகள் போதும்.. உடலும் உள்ளமும் எந்த புள்ளியில் சந்தித்து பூ பூக்கிறதோ அந்த புள்ளிதான் காதல்" இது காதலை பற்றிய வைரமுத்துவின் வரிகள். இப்போதைய காதலில் வலிமையும், தியாகமும், அர்ப்பணிப்பும், தூய்மையும், நேர்மையும், புரிதலும், சகிப்புத்தன்மையும் குறைந்து காணப்படுவதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இவையெல்லாம் சேர்ந்து ஒரு காதலில் தென்பட்டுவிட்டால், அதுதெய்வீக காதல்தானே? அப்படிப்பட்ட ஒரு காதல் சம்பவம்தான் இது.
மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரை சேர்ந்த இளைஞர் அதுல் லோகண்டே. பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா தலைராக இருந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் லோகண்டேவை மிகவும் நேசித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள். வீட்டில் பெற்றோரிடம் சொன்னார்கள். ஆனால் பெண் வீட்டில் இவர்களது திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பெண்ணின் அப்பாதான் இதில் அதிக பிடிவாதமாக இருந்தார்.
இதனால் அதுல், அந்த பெண்ணிடம், "நீ வீட்டை விட்டு வந்துவிடு, நாம கல்யாணம் செய்துக்கலாம்" என்றார். ஆனால் அந்த பெண்ணோ, "மாட்டவே மாட்டேன், இந்த ஜென்மத்தில் உங்களுடன்தான் எனக்கு திருமணம், ஆனால் அது பெற்றோர் சம்மதத்துடன் தான்" என்று கறாராக சொல்லிவிட்டார். சரி என்ன செய்வது என்று யோசித்த அதுல், எப்படியோ இந்த பெண்ணைதான் திருமணம் செய்ய போகிறோம், அவள்தான் தனக்கு இந்த ஜென்மத்தில் மனைவி, அதனால வருங்கால மாமனாரிடம் நேராக சென்று, நாமே பேசினால் என்ன என்று முடிவெடுத்து, கடந்த 3-ம் தேதி பெண்ணின் அப்பாவை சந்தித்தார். தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறும், உண்மையாக காதலித்து ஒருவரையொருவர் நாங்கள் புரிந்து வைத்துள்ளோம் என்றார்.
உன் காதல் உண்மையானதா?
இதைக் கேட்டதும் பெண்ணின் அப்பா, "அப்படியா... உன் காதல் உண்மைதான் என்பதை முதலில் நிரூபித்து காட்டு" என்றார். அதற்கு அதுல், "சரி.. நிரூபிக்கிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார். உடனே அவர், "என் வீட்டு முன்னால வந்து நின்னு,, உன் துப்பாக்கியை எடுத்து, நீயே உன்னை சுட்டுக் கொண்டு, உன் காதலை நிரூபிக்க முடியுமா?" என்று சவால் விட்டார். இதனை கேட்ட அதுல் எதுவும் சொல்லாமல் வீட்டுக்கு வந்துவிட்டார். பிறகு அன்று இரவே மீண்டும் வருங்கால மாமனாரிடம் சென்று திருமணம் குறித்து இன்னொரு முறை பேசினார்.
ரத்த வெள்ளத்தில் அதுல்
பலனில்லை. கெஞ்சி பார்த்தார்.. ம்ஹூம்.. ஒரு பயனும் இல்லை. தான் விட்ட சவாலிலேயே பெண்ணின் தந்தை உறுதியாக நின்றார். உடனே அதுல் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சரமாரி சுட்டுக் கொண்டார். அடுத்த கணமே ரத்தவெள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடினார். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த பெண்ணின் தகப்பனார் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அதுலை கொண்டு போய் சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்ற போராடினர்.
உருக்கமான வேண்டுகோள்
ஆனால் சிகிச்சை நடைபெறும்போது வந்த ஒரு தகவல் அனைவரையும் புரட்டி போட்டு, உறைய வைத்தது. காதலி வீட்டுக்கு துப்பாக்கியுடன் செல்வதற்கு முன்பு, அதுல் ஃபேஸ்புக்கில் ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். அதில், "என்னை என் மாமனார் அவரது வீட்டுக்கு வரசொல்லி இருக்கிறார். அங்கு என் காதலை நிரூபிக்க சொல்லி உள்ளார். என் துப்பாக்கியால் என்னை நானே சுட்டுக் கொண்டு காதலை நிரூபித்தால் மகளை திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்கிறார். அதனால் நான் என்னை சுட்டு கொண்டு, காதலை நிரூபிப்பேன். அத்துடன் நான் நேசித்தவளையும் நிச்சயமாய் கல்யாணம் செய்வேன். ஒருவேளை நான் இறந்து விட்டால், என் உடல் உறுப்புகளை ஒரே ஒருமுறை என் காதலியிடம் காண்பித்துவிட்டு, பிறகு அவற்றினை தானமாக கொடுத்துவிடுங்கள்" என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
கதறி கதறி அழுதனர்
மருத்துவர்களின் நீண்ட போராட்டத்தினால் அதுலின் உயிர் காப்பாற்றப்பட்டது ஆனால் அவர் மூளைச்சாவு நிலைக்கு சென்றுவிட்டார். அதனால் மருத்துவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. அதுலின் விருப்பப்படி அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். அதன்படி உடல் உறுப்புக்கள் அனைத்தும் எடுக்கப்பட்டன. அவை, உயிராக நேசித்த அந்த பெண்ணிடமும், வருங்கால மாமனார் என்று இறுதிவரை மனதில் வரித்த பெண்ணின் தந்தையிடமும் காட்டப்பட்டன. அந்த உறுப்புகளை கண்டு தந்தையும்-மகளும் கதறி கதறி அழுதனர். பின்னர் அந்த உறுப்புகள் எல்லாம் தேவைகளின் அடிப்படையில் வேறு வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
3 பேர்களின் தவறு
அந்த பேஸ்புக்கில் கடைசியாக அதுல் என்ன தெரியுமா எழுதியிருந்தார்? "இந்தியாவில் கலப்பு திருமணங்களும், சாதி மறுப்பு திருமணமும் நிறைய நடக்க வேண்டும், மேலும் உடலுறுப்பு தானம் இந்தியாவில் இன்னும் அதிகமாக உருவாக வேண்டும்" என்று. இந்த சம்பவத்தில் முதல் தவறு.. சுட்டுக் கொண்டு காதலை நிரூபி என்று சொல்வது கடைந்தெடுத்த தந்தையின் அயோக்கியதனமான பேச்சு. இரண்டாவது தவறு.. தனது தந்தை இப்படி ஒரு கிறுக்குத்தனமான சவால் விடுவதை, அந்த பெண்ணால் எப்படி அனுமதிக்க முடிந்தது? மூன்றாவது தவறு.. சவாலை நிரூபிக்க சுட்டுக் கொண்டால், பெண்ணுடன் எப்படி இணைந்து வாழ முடியும் என்று காதலன் நினைத்து பார்க்க வேண்டாமா?
கடைசியில் வென்றது காதல்தான்
பாஜகவில் இப்படி ஒரு இளைஞனா? தான் ஒரு பிரதான கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும், அதுல், அதனை தன் சுயநலத்துக்காக துஷ்பிரயோகம் செய்யவில்லை. பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து கொண்டு ஓடிபோய் தாலி கட்டவிடவில்லை. மடத்தனமாக பெண்ணின் தந்தை சவால்விட்டாலும், அதற்காக மல்லுக்கட்டி வாதாடி வன்முறையில் இறங்கவில்லை. மாறாக கீழ்படிந்துள்ளார். இறுதிவரை, உடலுறுப்பு தானத்தை வலியுறுத்தும் மிகசிறந்த மனித நேய மிக்க இளைஞராகவும், சாதி மறுப்பு திருமணத்தை ஆதரிக்கும் சிறந்த குடிமகனாகவும் இருந்திருக்கிறார். அதுலை இழந்துவிட்டோமே என்று துடிப்பது அந்த பெண்ணும், அவளது தந்தையும் மட்டுமல்ல. நாமும்தான்! கடைசியில் வென்றது அதுலின் காதல்தான்