காதலி மரணம்.... ஷாப்பிங் மாலில் இருந்து குதித்து உயிரைவிட்ட காதலன்!
காதலி உயிரிழந்ததால் மனமுடைந்த இன்ஜினியர் ஒருவர் ஷாப்பிங் மாலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.
காசியாபாத்: காதலி தற்கொலை செய்துகொண்டதால் குற்ற உணர்ச்சியில் தவித்து வந்த இளைஞர் ஷாப்பிங் மாலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானை சேர்ந்த ரின்கு மீனா என்பவர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் டெல்லியை சேர்ந்த பிரியா சிங் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து அடிக்கடி டெல்லி வந்துள்ள ரின்கு அங்குள்ள ஷாப்பிங் மால்களில் பிரியா சிஙகை சந்தித்துள்ளார். அவர்களின் காதல் விவகாரம் பிரியாசிங்கின் பெற்றோருக்கு தெரிந்ததால் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 22ஆம் டெல்லி ஷதாரா பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இருந்து குதித்து பிரியா சிங் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு ரின்கு தான் காரணம் என பிரியாவின் பெற்றோர் புகார் அளித்ததால் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ரின்கு காசியாபாத் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சட்டைப் பையில் இருந்து கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் ரின்கு தனது பெற்றோருக்கு தான் பிரியா சிங்கை காதலித்ததாகவும், வாழ்ந்தாலும் ஒன்றாக வாழ்வோம், செத்தாலும் ஒன்றாக சாவோம் என உறுதியளித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது காதலி உயிரிழந்த பிறகு தனக்கு வாழ விருப்பம் இல்லை என்றும் ரின்கு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ரின்குவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.