வாலிபர் தற்கொலை: 'ஏப்ரல் ஃபூல்' ஆக்க நினைப்பதாக கருதிய பெற்றோர்
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட செய்தியை போலீசார் தெரிவித்தபோது அவர்கள் முட்டாள் தினத்தில் தங்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் என்று அவரின் பெற்றோர் நினைத்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜலாவ்ன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்கித்(24). அவர் கடந்த 1ம் தேதி அதாவது முட்டாள்கள் தினத்தன்று கான்பூருக்கு சென்றுள்ளார். அங்குள்ள கோவிந்த்புரி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் அன்கித்தின் பெற்றோருக்கு போன் செய்து அவர் தற்கொலை செய்து கொண்ட தகவலை தெரிவித்தனர். ஆனால் அவர்களோ முட்டாள்கள் தினத்தில் எங்களை முட்டாளாக்க முயற்சி செய்கிறீர்களா என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டனர். போலீசார் இரண்டு முறை போன் செய்தும் அவர்கள் நம்பவில்லை.
ரயில்வே போலீசார் மீண்டும் மூன்றாவது முறையாக தகவல் தெரிவித்தபோது தான் அவர்கள் அதை நம்பி கான்பூருக்கு வந்தனர். அன்கித் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.