"மோடி"க்கு உதவி... சுஷ்மாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு- வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்!!
டெல்லி: தேடப்படும் குற்றவாளி லலித் மோடிக்கு உதவியத மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி டெல்லியில் அவரது வீட்டு முன்பாக இளைஞர் காங்கிரசார் இன்று போராட்டம் நடத்தினர்.
ஐ.பி.எல். போட்டிகளில் பல நூறு கோடி ரூபாய் நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இந்தியாவை விட்டு தப்பி ஓடியவர் லலித் மோடி. லண்டனில் தலைமறைவாக இருந்து கொண்டு இந்திய கிரிக்கெட் விவகாரங்களில் குடைச்சல் கொடுத்து வருகிறார்.
இவரை மத்திய அமலாக்கத் துறை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவியது; லலித் மோடி உதவியை சுஷ்மா ஸ்வராஜ் குடும்பமே பெற்றது தொடர்பாக ஏராளமான தகவல்கள் ஊடகங்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து சுஷ்மா ஸ்வராஜ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் இன்று சுஷ்மா ஸ்வராஜ் வீட்டை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
மத்திய அமைச்சரவையில் இருந்து சுஷ்மாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சுஷ்மாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.