சகிப்பின்மை விவகாரம்... மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் இளைஞர் காங். போராட்டம்- போலீசுடன் மோதல்!
டெல்லி: சகிப்பின்மை விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது போலீசாருடன் மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான இளைஞர் காங்கிரசார் முழக்கங்களை எழுப்பியபடி போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற சாலையில் உள்ள காவல்நிலையத்தை முற்றுகையிடும் வகையில் அவர்கள் முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக செல்ல முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இந்த தடையை மீறி இளைஞர் காங்கிரசார் முன்னேறிச் செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும் இளைஞர் காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் கலைந்து செல்லும் வகையில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர் போலீசார். சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டோர் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.
இளைஞர் காங்கிரஸின் இந்த போராட்டத்தால் டெல்லி நாடாளுமன்ற சாலை பகுதியில் பதற்றம் நிலவியது.