பிரபாஸ் போல மலையில் ஏற முயற்சித்து... பாகுபலியாகும் முயற்சியில் பரிதாபமாக பலியான இளைஞர்
ஹைதராபாத்: பாகுபலி பட நாயகன் போலவே நிஜத்தில் மலையேறி குதிக்க ஆசைப்பட்ட இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்து வருகிறது பாகுபலி. இப்படத்தின் பிரம்மாண்டத்தால் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது இப்படம்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் உக்தியால் உருவாக்கப்பட்டவை. ரசிகர்கள் பார்த்து மலைத்த பல காட்சிகளை எப்படி கிராபிக்ஸ் உதவியோடு படமாக்கினார்கள் என்பது தொடர்பாக சமீபத்தில் ஒரு வீடியோ கூட வெளியானது.
அதில், பாகுபலி பட நாயகன் பிரபாஸ் எவ்வாறு மலையேறிச் சென்று தமன்னாவை அடைகிறார் என்ற காட்சிகளும் இருந்தது. சாதாரண முறையில் அக்காட்சிகளை படமாக்கி, அவற்றை எப்படி படத்தில் மிரட்டும் விதமாக பிரம்மாண்டமாகக் காட்டி இருந்தார்கள் என விளக்கப்பட்டிருந்தது.
ஆனால், இவற்றை உணராமல் தானும் பாகுபலி போல் மலையேறி சாகசம் செய்கிறேன் என பரிதாபமாக உயிரை விட்டிருக்கிறார் ஷபீர் என்ற 23 வயது இளைஞர்.
விடுமுறை தினத்தை முன்னிட்டு தெலுங்கானாவின் வட பகுதியில் உள்ள கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள சிங்காரம் அருவிக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார் ஷபீர். அங்கிருந்த மலைகளைக் கண்டு மலைத்துப் போன அவருக்கு திடீரென பாகுபலிக் காட்சிகள் மனக்கண்ணில் தோன்றியுள்ளது.
இதனால், நண்பர்கள் தடுத்தும் கேளாமல், "பாகுபலி" போல் ஆவேசமாக மலையில் ஏறத் தொடங்கியுள்ளார் ஷபீர். தன் வீரத்தை நண்பர்கள் முன் நிரூபிக்க முயற்சித்த ஷபீருக்கு, எதிர்பாராத விதமாக கால் சறுக்கியது. இதனால், கீழே விழுந்து காயம் பட்டார். உடனடியாக அவரை நண்பர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் உல்லாசமாக விடுமுறையைக் கழிக்கச் சென்ற நண்பர்களின் மகிழ்ச்சி காணாமல் போய், சோகம் ஏற்பட்டது.
ஏற்கனவே, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சக்திமான் உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகளைப் பார்த்து சிறுவர்கள் பறக்கும் முயற்சியில் வீட்டு மாடிகளில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவங்களும் ஏற்கனவே நடந்துள்ளது.
சினிமா என்பது கனவுத் தொழிற்சாலை என்பதை அறிந்தும், சினிமாவில் படம்பிடிக்கும் காட்சியமைப்பைப் பற்றிய ரகசியமும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தப்படும் இந்தக் காலத்திலும், எவ்வித பாதுகாப்பும் இன்றி செய்யும் இதுபோன்ற முயற்சிகள் தொடர்வது வேதனை அளிப்பதாகவே இருக்கிறது.