ஒரு போஸ்ட் போட்டார்.. லைக் எதிர்பார்த்தார்.. ஆனா, கிடைத்தது ஜெயலலிதா அடைக்கப்பட்ட ஜெயில்தான்!
பெங்களூர்: பைக்கில் பந்தாவாக வீலிங் செய்து நண்பர்களிடம் லைக் எதிர்பார்த்து பேஸ்புக்கில் அந்த போட்டோவை போட்ட பெங்களூர் இளைஞர் தற்போது மத்திய சிறையில் கம்பி எண்ணிக்கொண்டுள்ளார்.
பெங்களூர் பிரேசர் டவுன் கோல்ஸ் பார்க் பகுதியை சேர்ந்தவர் முகமது அப்துல் வாகித் ஜூபர். 21 வயது இளைஞர். பைக்கில் வீலிங் செய்வது என்றால் இவருக்கு கொள்ளை பிரியம். நண்பர்களுடன் சேர்ந்து தெரு வீதிகளில் இப்படி செய்வது வழக்கம். பெண்கள் அதை பார்த்து பீதியில் விலகி ஓடுவதை பார்த்து ஆனந்தம்.
அத்தோடு விட்டாரா அப்துல் வாகித். பைக்கில் வீலிங் செய்து அதை பந்தாவாக பேஸ்புக்கில் ஷேர் செய்தார் அவர். எதிர்பார்த்ததை போலவே லைக்குகள், ஆஹோ.. ஓஹோ.. பாராட்டு கமெண்டுகள் கிடைத்தன. ஆனால், எதிர்பாராமல் ஒன்றும் நடந்தது.
|
போலீசுக்கு தகவல்
பேஸ்புக்கில் இந்த பதிவை பார்த்த பெங்களூர் போலீசார், கொத்தாக தூக்கிக்கொண்டு போய் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்துள்ளனர். வீலிங் செய்தால் போலீஸ் பிடிக்குமா.. என சிறையில் இருந்தபடி சொந்தக்காரர்களிடம் அப்பாவியாய் கேட்டுக்கொண்டுள்ளாராம் அப்துல் வாகித்.
மக்கள் நிம்மதி
இதனிடையே ஏரியாவையே கலங்கடித்த வாகித்தின், வீலிங் நண்பர்களையும் போலீசார் இப்போது தேடி வருகிறார்கள். ஏரியா வாசிகள் இப்போது அச்சமின்றி தெருவில் நடமாட முடிகிறது என நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.
பைக் சாகசம்
பக்ரீத் தினத்தின்போது எடுத்த போட்டோக்கள் அவை என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சீட்டின் மேல் நின்றபடி பைக்கை ஓட்டி சாகசம் செய்து சக நண்பர்களோடு பயங்கர ஆட்டம் போட்டுள்ளார் அப்துல் வாகித்.
பெரிய பஞ்சாயத்து
பெங்களூரில் இதுபோன்ற பைக் சாகசங்கள் செய்வோருக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சில வருடங்கள் முன்பு எம்ஜிரோடு அருகே வீலிங் செய்த வாலிபரை போலீசார் விரட்டிச் சென்றபோது அவர் ராணுவ அதிகாரி வீட்டுக்குள் ஏறி குதித்தார். பாதுகாப்பு வீரர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.