உ.பி.: மாஜிஸ்திரேட்டுடன் செல்ஃபி எடுத்து கம்பி எண்ணிய வாலிபர்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மாஜிஸ்திரேட்டுடன் செல்ஃபி எடுத்த 18 வயது வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள கமல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபராத் அகமது(18). கடந்த திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புலந்த்ஷாஹர் மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரகலா உள்ளூர் பிரச்சனை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அகமது அவருக்கு மிக அருகில் சென்று தனது செல்போனை எடுத்து செல்ஃபி எடுக்கத் துவங்கினார். அனுமதி இன்றி செல்ஃபி எடுக்கக் கூடாது என்று கூறியும் அவர் எடுத்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 3 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்த அகமது வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து சந்திரகலா கூறுகையில்,
அந்த பையன் புகைப்படம் மேல் புகைப்படம் எடுத்தார். அனுமதி பெறாமல் இவ்வாறு செய்யக் கூடாது என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உங்கள் கேமரா தான் ஆனால் யாரை வேண்டுமானாலும் அவர்களின் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுப்பதா? இது அதிர்ச்சியாக உள்ளது என்றார்.