கண்ணை மறைத்த குடிபோதை.. தாயைக் கொன்ற தனயன்.. தங்கை உயிர் ஊசல்!
பெற்ற தாயை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த மகன் கைதானார்.
ஹைதராபாத்: குடிபோதை கண்ணை மறைத்ததுடன் பெற்ற தாயை கொடூரமாகவும் அடித்து கொலை செய்திருக்கிறார் வெறிபிடித்த மகன் ஒருவர்.
பஞ்சாரா ஹில்ஸ் அருகே நந்தி நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு சக்குபாய் என்னும் 55 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு கோபி என்ற மகன், ராணி என்ற ஒரு மகளும் உள்ளனர். கோபிக்கு தினமும் சரக்கு அடிக்கும் பழக்கம் உள்ளது. தாய் எவ்வளவு சொல்லியும் மகன் அவரது பேச்சை கேட்கவில்லை போலிருக்கிறது.
கண்ணீர் சிந்திய தாய்
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று இரவு கோபி போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அன்றைய தினம் ரொம்ப லேட்டாக வீட்டுக்கு வந்திருக்கிறார் கோபி. தள்ளாடிபடியே மகன் வீட்டுக்குள் நுழைவதை கண்ட தாய் வழக்கம்போல் கண்ணீர் சிந்தினார். மகனிடம் அந்த கண்ணீரை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
2-வது முறை சாப்பாடு
வீட்டுக்கு லேட்டாக வந்தாலும், மகனுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்து சாப்பிட சொல்லிவிட்டு சக்குபாய் தூங்க போய்விட்டார். தட்டிலிருந்த சாப்பாட்டை சாப்பிட்டு முடித்ததும், இன்னும் கொஞ்சம் சாப்பாடு வேணும் என்று தூங்கி கொண்டிருந்த அம்மாவை கோவி எழுப்பினார். அப்போது அருகில் தூங்கி கொண்டிருந்த கோபியின் தங்கை, "அம்மாவை எழுப்பாதே, நான் சாப்பாடு போடுகிறேன்" என்று சொல்லி, எழுந்து வந்து 2-வது முறை சாப்பாடு போட்டு விட்டு மீண்டும் தூங்க போய்விட்டார்.
3-வது முறை சாப்பாடு
ஆனால் அந்த சாப்பாட்டையும் சாப்பிட்டு முடித்த கோபி, 3-வது முறை சாப்பாடு வேண்டும் என்று தூங்கிய அம்மாவிடம் சென்று மீண்டும் கேட்டிருக்கிறார். அதற்கு தங்கை ராணியோ, "கிச்சன்-ல தானே சாப்பாடு இருக்கு, உனக்கு எவ்வளவு வேணுமோ எடுத்து போட்டுக்கோ" என்று சொல்லி இருக்கிறார்.
அலறி விழுந்த தங்கை
இதனால் ஆத்திரம் அடைந்த கோபி, ராணியை அருகில் இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து ஓங்கி அடித்தார். இதில் வலி தாங்க முடியாமல் ராணி அலறினார். இந்த சத்தத்தை கேட்டு சக்குபாய் எழுந்துவிட்டார். கிரிக்கெட் பேட்டை வெறி பிடித்த மாதிரி கையில் பிடித்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கோபி தங்கையை மீண்டும் அடிக்க போகும்போது, சக்குபாய் வேகமாக வந்து மகனை தடுத்தார்.
உயிரிழந்த சக்குபாய்
இதனால் இன்னும் வெறியேறிய கோபி, அம்மாவின் தலையிலும் பேட்டில் ஓங்கி அடித்தார். இதில் சக்குபாய்க்கு ரத்தம் பொலபொலவென கொட்டியது. பலத்த காயம் அடைந்த ராணியும், சக்குபாயும் சுருண்டு விழுந்தனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, தாயும், மகளையும் மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினர். அங்கு இருவரும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடைபெற்றது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சக்குபாய் உயிரிழந்துவிட்டார். இதனை தொடர்ந்து கோபியும் கைது செய்யப்பட்டார்.
காவு வாங்கும் டாஸ்மாக்
தனக்கு சாப்பாடு போடவில்லை என்று பெற்ற தாயை அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலங்காலமாக பெருக்கெடுத்து ஓடும் ரத்தங்களையும், கொடூர மரணங்களையும், காவு வாங்குவதை இந்த டாஸ்மாக் எப்போதுதான் நிறுத்த போகிறதோ தெரியவில்லை.