திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி.. 'பாபநாசம்' ஸ்டைலில் கொன்று புதைத்த காதலன்.. கைது!
ஹூப்ளி: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை இரக்கமில்லாமல் கொன்று புதைத்து விட்டு பொய் சாட்சி தயார் செய்து வைத்துக்கொண்டு ஒரு வருடத்திற்கும் மேல் தப்பித்துள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த கொலைகாரன். பாபநாசம் பட பாணியில் நடந்த இந்த சம்பவம் சினிமாவை விட திரில் நிறைந்ததாகவே இருக்கிறது. கொலை நடந்த விதத்தையும், கொலையாளியை கண்டு பிடித்த விதத்தையும் ஹூப்ளி போலீஸ் கமிஷனர் பாண்டுரங்க ரானே விவரிக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி க்ரிஷி விக்யான் கேந்திரா என்ற விவசாயப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படித்து வந்தவர் அருண் சிவலிங்கப்பா படேல். இவர், தன்னுடன் படித்த அர்பிதா என்ற மாணவியை காதலித்துள்ளார். மூன்றாண்டுகள் இருவரும் பல இடங்களுக்கு சுற்றித்திரிந்துள்ளனர்.
கல்லூரிப் படிப்பு முடிந்துவிட்டதால், அருண் பெங்களூருவுக்குச் சென்றுவிட்டார். அங்கு மேற்படிப் படிக்க வேறொரு கல்லூரியில் சேர்ந்து விட்டார். அர்பிதா தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். அருணை தொடர்பு கொண்ட அர்பிதா, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதோடு, திருமணம் செய்ய மறுத்தால் தன் பெற்றோரிடம் சொல்வதாகவும் கூறவே, அருண் யோசித்தார்.
கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி அருண், தன்னுடைய செல்போனை கல்லூரி ஹாஸ்டலில் வைத்துவிட்டு, வகுப்பறையில் பொய்யாக வருகைப் பதிவேட்டில் வருகையைப் பதிவுசெய்துள்ளார். அதன்பிறகு, அர்பிதாவை கப்பூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அவர் கழுத்தை நெரித்துக் கொன்றதுடன் அங்கேயே ஓர் இடத்தில் புதைத்துவிட்டு பெங்களூருவுக்குத் திரும்பிவிட்டார்.
அதே நேரத்தில், கல்லூரிக்குச் சென்ற தன் மகளை காணவில்லை என அர்பிதாவின் பெற்றோர் தார்வாட் காவல்நிலையில் புகார் அளித்தனர். இந்த நிலையில், 2015, ஜூன் மாதம் 3ம் தேதி அந்த நிலத்தின் சொந்தக்காரர் ஜாஹிர் ஹுசைன் என்பவர் நாய்கள் கடித்து குதறிய அழுகிய நிலையில் இருந்த ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் அளித்தார்.
அங்கு வந்த போலீசார் அது அர்பிதாவின் உடல்தான் என்பதை அவரது பெற்றோர் மூலம் உறுதி செய்தனர். இதுபற்றி விசாரிக்க துணை போலீஸ் கமிஷனர் மல்லிகார்ஜுன் பாலதந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
அருணும், அர்பிதாவும் மூன்றாண்டுகளாக காதலித்ததை பலரும் உறுதி செய்தனர். ஆனால் கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போலவே அருண் நடித்துள்ளார். ஹூப்லி தர்வாத் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அருண் வைத்திருந்த டைரியை கண்டு பிடித்தனர். அந்த டைரியில் எந்த மாதிரி போலீஸ் கேள்வி கேட்டால் அதற்கு எப்படி பதில் சொல்வது என்பதை விலாவாரியாக எழுதி வைத்திருந்தாராம் அருண்.
இதனை கண்டுபிடித்த போலீசார், அருணை மடக்கினர். ஒரு வருடத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த விசாரணையில், கடந்த 17ம் தேதி ஹூப்லி தர்வாத் போலீசாரிடம் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார், அருண். மலையாளத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம், தமிழில் பாபநாசம் என்ற பெயரிலும், கன்னடத்தில் திரிஷ்யா என்ற பெயரிலும் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. அதில் ஹீரோ, தனது மகள் செய்த கொலையை மறைக்க பல சாட்சிகளை தயாரித்து வைத்திருப்பார்.
திரிஷ்யா படத்தைப்போன்றே தனக்கும் அந்தக் கொலைக்கும் சம்பந்தம் இல்லாதவாறு தன்னைப் பாதுகாக்கப் பொய்யான ஆதாரங்களைச் சேகரித்து வைத்திருந்திருந்த அருண், அதைவைத்து ஒருவருடம் போலீசாரிடமிருந்து தப்பித்திருக்கிறார். இறுதியில் தீவிர விசாரணையின்போது அவர் மாட்டிக்கொண்டார் என்று ஹூப்ளி போலீஸ் கமிஷனர் பாண்டுரங்க ரானே.
எவ்வளவு கில்லாடியான குற்றவாளியாக இருந்தாலும் அவருக்கு தெரியாமல் ஒரு தடயத்தை விட்டு சென்றிருப்பார், அதன் மூலம் மாட்டிக்கொள்வார் என்பது இந்த கொலை வழக்கில் உறுதியாகியுள்ளது.