செருப்பு மாலையுடன் நிர்வாணமாக கழுதை மீது ஊர்வலம்... பலாத்கார குற்றவாளிக்கு வினோத தண்டனை!
மும்பை : மராட்டிய மாநிலத்தில் 15 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, செருப்பு மாலையுடன் நிர்வாணமாக கழுதை மீது அமர வைத்து ஊர்வலமாக வரச் செய்து கிராம மக்களே தண்டனை அளித்துள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சமீபத்தில் திம்மாப்பூர் சிறைக்குள் புகுந்து பலாத்கார குற்றவாளியை நிர்வாணமாக அழைத்துச் சென்று கும்பல் ஒன்று அடித்துக் கொலை செய்தது. இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் பலாத்கார குற்றவாளி ஒருவருக்கு மக்களே சேர்ந்து வினோத தண்டனை ஒன்றை வழங்கியுள்ளனர்.
அஹமத்நகர் மாவட்டத்தின் வம்போரி கிராமத்தை சேர்ந்த சுபம் பார்டியா(19) என்ற இளைஞர், அதே கிராமத்தை சேர்ந்த வேறொரு ஜாதியை சேர்ந்த சுமார் 15 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த சுபம், அதனை வீடியோவாகவும் பதிவு செய்து வந்துள்ளார்.
பின்னர், அந்தக் காட்சிகளை வெளியே பரப்பி விடுவேன் என மிரட்டி சுபம், அப்பெண்ணைப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது பெற்றோரிடம் அப்பெண் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று, குற்றம் சாட்டப்பட்ட சுபத்தை நிர்வாணப்படுத்தி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து கழுதை மீது அமர வைத்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனைத் தட்டிக் கேட்ட சுபத்தின் பெற்றோரையும், உறவினர்களையும் பெண்ணின் உறவினர்கள் தாறுமாறாக அடித்துள்ளனர். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உறவினர்கள் 17 பேரை கைது செய்தனர்.
‘விபரம் அறியாத சிறுமியை ஆசை காட்டியோ, ஏமாற்றியோ, மிரட்டியோ பலாத்காரம் செய்வது குற்றம்தான். அந்த குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டியவன்தான். எனினும், உயர்ந்த ஜாதி-தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாட்டின் அடிப்படையில் சிறுபான்மை மக்களின் மீது மேலாதிக்கவாதிகள் நடத்தும் இதைப்போன்ற காட்டு தர்பார்கள் நாகரிகம் அடைந்த சமுதாயத்துக்கு ஏற்புடையது அல்ல' என சுபமின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சுபம் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக, நேற்றிரவு அந்த சிறுமி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.