ஒரு தலைக்காதல்... காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி மீது காரை ஏற்றி கொலை முயற்சி
திருவனந்தபுரம்: கேரளாவில் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்த பெண் மீது, இளைஞர் ஒருவர் காரை மோதி கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலை ஏற்றுக் கொள்ளாத பெண்கள் மீது ஆசிட் வீசுவது, கத்தியால் குத்துவது உள்ளிட்ட வன்முறைகள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில், கேரளாவில் இளைஞர் ஒருவர் தனது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்த பெண் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சித்துள்ளார்.
கேரளாவில் திரிசூர் அருகே அரிம்பூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி நேற்று காலை 10 மணி அளவில் கோவிலுக்கு சென்று விட்டு வெளியில் வந்துள்ளார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள் இது எதிர்பாராமல் நடந்த விபத்து போல் தெரியவில்லை, வேண்டுமென்றே அப்பெண் மீது கார் மோதியது என போலீசில் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது கரளம் பகுதியைச் சேர்ந்த ஷெபின் என்பது கண்டுபிடிக்கப் பட்டது. விபத்து ஏற்படுத்திய காரைக் கண்டுபிடித்துள்ள போலீசார், ஷெபினைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
ஷெபின் காயமடைந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அப்பெண் ஷெபினின் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் இந்த கொலை முயற்சி நடந்துள்ளதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.