பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் மீது ஷூ வீச்சு!
லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் பேசிக் கொண்டிருந்த போது அவர் மீது திடீரென ஷூ வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலம் இஸ்ருவில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் கலந்து கொண்டு பேசினார். அவர் தனது பேச்சை தொடங்கும்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பியவாறு தான் அணிந்து இருந்த ஷூவை கழற்றி அவரை நோக்கி வீசினார்.
அந்த ஷூ மேடை அருகே வந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் ஷூ வீசிய நபரின் பெயர் விக்ரம் என்றும் வேலையில்லாத பட்டதாரி என்பது தெரியவந்தது.
தன்மீது ஷூ வீசிய நபரை தான் மன்னித்து விட்டதாக பிரகாஷ்சிங் பாதல் தெரிவித்தார். இதற்கிடைய முதல்வர் மீது ஷூ வீசிய விக்ரம் கூறுகையில், அரசியல்வாதிகள் அனைவரையும் நான் வெறுக்கிறேன். அவர்கள் போலியான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றார்.