ஆந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய ஜெகன்மோகனுக்கு கோர்ட் அனுமதி
ஹைதராபாத்: சுற்றுப் பயண விவரங்களை கோர்ட்டுக்கு தெரிவித்து விட்டு ஜெகன் மோகன் ரெட்டி டெல்லி மற்றும் ஆந்திராவின் பிற பகுதிகளுக்குச் செல்லலாம் என கோர்ட் தெரிவித்துள்ளாது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார் ஜெகன் மோகன். அப்போது கோர்ட் அனுமதியில்லாமல் தலைநகர் ஹைதராபாத்தை விட்டு ஜெகன் வெளியில் செல்லக்கூடாது என கோர்ட் நிபந்தனை விதித்தது.
இந்நிலையில், சமீபத்தில் ஜெகன் நடத்திய தெலுங்கானா எதிர்ப்பு பொதுக்கூட்டத்திக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 11ம் தேதி ஆந்திராவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், டெல்லி செல்லவும் ஏதுவாக தனது ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என ஜெகன், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவின் மீதான இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கோர்ட், ஆந்திர சுற்றுப் பயணங்களைக் கோர்ட்டுக்கு தெரிவித்து விட்டு, ஆந்திராவின் பிற பகுதிகள் மற்றும் டெல்லிக்கு செல்ல ஜெகனுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.