சிறப்பு அந்தஸ்து கோரி ஆக.,2ல் ஆந்திராவில் பந்த் .. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆகஸ்ட் 2-ம்தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கான மாநிலம் பிரிக்கப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது. இதனிடையே ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்திலும் ஆந்திர எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்படவில்லை என்றும், தேவையான நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வரும் 2-ம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நடைபெற உள்ள இந்த முழு அடைப்பு போராட்டத்தில், கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். சிறப்பு அந்தஸ்து பெற்று தருவதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுத்த முறைகேட்டிலும் சம்பந்தப்பட்டுள்ளார். அதில் இருந்து தப்பிக்க வேண்டும். அதனால், பா.ஜ.க. அரசுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. தெலுங்கு தேசம் கட்சி மக்களை ஏமாற்றிவிட்டது" என்றார்.