சிறப்பு அந்தஸ்து கோரி ஒய்எஸ்ஆர் காங் முழு அடைப்பு போராட்டம்... ஆந்திரத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சிறப்பு அந்தஸ்து கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஆந்திரத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
அமராவதி: ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி கேசினேனி ஸ்ரீநிவாஸ் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவையில் கடந்த 20-ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
ஒய் எஸ் ஆர் காங்
இதையடுத்து பிரதமர் உரை நிகழ்ச்சிய பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் கிடைத்தது. இந்நிலையில் இதுதொடர்பாக கடந்த 21-ஆம் தேதி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.
போராட்டம்
அப்போது ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு அநீதி இழைத்து விட்டது. இதை கண்டித்து 24-ஆம் தேதி ஆந்திரத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
பேருந்து இல்லை
அதன்படி இன்று ஆந்திரத்தில் முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணிக்கு தொடங்கியது. இதனால் மாநிலத்தில் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. எந்த கடைகளும் திறக்கப்படவில்லை.
இயல்பு வாழ்க்கை
அத்தியாவசிய பொருட்களான மருந்து, பால் உள்ளிட்டவை மட்டுமே கிடைக்கின்றன. பேருந்துகளை வழிமறித்தும் போராட்டம் நடத்துவதால் பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வண்டிகள் இயக்கம் இல்லை
போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகள் வெறிசோடி காணப்படுகின்றன. அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஆங்காங்கே போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.