ஊருக்கு ஒரு நியாயம்... இவருக்கு ஒரு நியாயம்... சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா எம்.எல்.ஏ.
அமராவதி: ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதை பொருட்படுத்தாமல் நடிகையும், ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜாவுக்கு ஊரே ஒன்று கூடி மலர்கள் தூவி வரவேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசும், உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தி வரும் நிலையில் அதனை நிராகரிக்கும் வகையில் ரோஜா நடந்துகொண்ட விதம் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
கிராம மக்கள் தான் அறியாமையில் மலர்கள் தூவினார்கள் என்றால் அதனை ரோஜா ஏன் தடுத்து நிறுத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது தெலுங்கு தேசம் கட்சி.
வழிநெடுகிலும் வரவேற்பு
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா புத்தூர் அருகே உள்ள சுந்தரய்ய நகரில் புதிய குடிநீர் குழாயை திறந்து வைக்க சென்ற போது, அவருக்கு கிராம மக்கள் ஒன்று கூடி வரிசையாக நின்று வழிநெடுகிலும் மலர்கள் தூவி வரவேற்றனர். நாட்டாமை படத்தில் நடிகர் சரத்குமாருக்கு அளிக்கப்படும் வரவேற்பை போன்று ரோஜாவின் காலடியில் மலர்களை மக்கள் தூவ, அதனை ஒரு பேச்சுக்கு கூட வேண்டாம் எனக் கூறாமல் பவனி வந்தார் ரோஜா.
கடும் விமர்சனம்
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் இப்போது தான் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது போன்ற நேரத்தில் தான் சமூக விலகலை கடைபிடித்து அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும். ஆனால் இது குறித்து எதைப்பற்றியும் ரோஜா எம்.எல்.ஏ. பொருட்படுத்தியதாக தெரியவில்லை. ரோஜாவின் இந்த நடவடிக்கையை தெலுங்கு தேசம் கட்சி கடுமையாக கண்டித்துள்ளதோடு விமர்சிக்கவும் செய்துள்ளது.
சர்ச்சையில் சிக்கினார்
ரோஜா நடந்து வந்த பாதையில் மலர்கள் தூவியதோடு மட்டுமல்லாமல் பிரம்மாண்ட மாலை ஒன்றும் அவர் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. ரோஜாவை பொறுத்தவரை பொதுவாகவே எந்தக் காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பவர். அண்மையில் கூட கொரோனா தடுப்பு பணிகளில் அவரது செயல்பாடுகளுக்கு பாராட்டுகள் குவிந்த நிலையில் அவரே அதனை கெடுத்துக்கொள்ளும் வகையில் இப்போது நடந்துகொண்டது தான் குறிப்பிடத்தக்கது.
டிராக்டர் ரேலி
ஆந்திராவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இப்படி சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் தான் காளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி கொரோனா நிவாரண நிதி அளிக்கும் விவகாரத்தை மையமாக வைத்து ஜெகன் மோகன் ரெட்டி கட் அவுட்களை டிராக்டர்களில் வைத்து மெகா ரேலி நடத்தி சர்ச்சையில் சிக்கினார். இப்போது புதிதாக ரோஜா சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தான் தலைவலி ஏற்பட்டுள்ளது.